மஹாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் இந்த யாவத்மால் ஆகும். விதர்பா பிரதேசத்தில் 1,460 அடி உயரத்தில் அமைந்துள்ள இது சந்திரபூர், பர்பானி, அகோலா மற்றும் அம்ராவதி மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. யாவத்மால் என்ற பெயரானது மராத்தி மொழியில் 'மலை' என்ற பொருளைத்தரும் 'யாவத்' எனும் சொல்லையும், 'வரிசை' என்ற பொருளைத்தரும் 'மால்' என்ற சொல்லையும் சேர்த்து உருவாகியுள்ளது. வரலாற்றுப்பின்னணி யாவத்மால் நகரத்தின் வரலாற்றுப்பின்னணியை நோக்கும்போது இது பல புகழ்பெற்ற ராஜவம்சங்களால் ஆளப்பட்டிருப்பது புலனாகிறது. இவை எல்லாமே யாவத்மால் நகரத்தின் வளர்ச்சி, பாரம்பரியம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பிரத்யேகமான பங்களிப்புகளை அளித்து விட்டுச் சென்றிருக்கின்றன. வாருங்கள் இவை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
யவடேச்சா மஹால்
யாவத்மால் என்று அறியப்படுவதற்கு முன்னர் இந்த நகரம் யவடேச்சா மஹால் என்றும் யோத்-லோஹார் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தில் பீரார் பகுதியின் தக்காண சுல்தான் ஆளுகையின் கீழ் முக்கிய நகரமாக இது திகழ்ந்திருக்கிறது.
மராத்தாக்கள்
அஹமத்நகர் அரசர்களிடமிருந்து முகலாயரால் கைப்பற்றப்பட்ட இந்நகரம் கடைசி முகலாய மன்னருக்கு பிறகு மராத்தாக்கள் வசம் வந்துள்ளது. இறுதியில் ஆங்கிலேயர்கள் இப்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளனர். சிட்டி ஆஃப் சென்ட்ரல் இந்தியா என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இது பின்னர் மஹாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தலங்கள்
யாவத்மால் குறித்த முக்கிய தகவல்கள் யாவத்மால் நகரம் இங்குள்ள புராதனமான கோயில்கள் மற்றும் ரம்மியமான சுற்றுலாத்தலங்களுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. நரசிம்மர் கோயில், தத்தா மந்திர், கலம்ப், கடேஷ்வர் மஹாராஜ் கோயில் இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும்.
நிலவறைக்கோயில்
ஜகத் கோயில் மற்றும் கோஜோச்சி மசூதி போன்றவையும் யாவத்மால் நகரில் அமைந்துள்ளன. யாவத்மால் அருகிலுள்ள கலாம்ப் எனும் சிறு கிராமத்தில் சிந்தாமணி கணேஷ் என்றழைக்கப்படும் ஒரு பிரசித்தமான நிலவறைக்கோயில் அமைந்துள்ளது.
காட்டுயிர் வாழ்க்கை
அதன் அருகாமையிலேயே கணேச குண்டம் எனும் புண்ணிய தீர்த்தமும் அமைந்துள்ளது. பைன்கங்கா காட்டுயிர் சரணாலயம் மற்றும் திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இங்கு யாவத்மால் பகுதியில் இயற்கை மற்றும் காட்டுயிர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சங்களாக அமைந்துள்ளன.
குளிர்காலத்தில் விஜயம் செய்வதற்கு ஏற்ற சூழலுடன் காணப்படும் யாவத்மால் நகருக்கு விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் பயணம் மேற்கொள்ளலாம்.
பைன்கங்கா காட்டுயிர் சரணாலயம்
இந்த பைன்கங்கா காட்டுயிர் சரணாலயத்தின் மூன்று புறமும் பைன்கங்கா ஆறு சூழ்ந்திருப்பதால் அந்த ஆற்றின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இது யாவத்மால் நகரில் உமர்கேத் தேசில் வட்டத்தில் அமைந்துள்ளது.தோராயமாக 325 ச.கி.மீ பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தாவர வகைகளும் உயிரினங்களும் நிறைந்துள்ளன. தாவர வகைகளில் இங்கு உலர் தேக்கு மரக்காடுகள் மற்றும் தெற்குப்பிரதேச கலவையான இலையுதிர்காடுகள் காணப்படுகின்றன. உயிரினங்களில் சிங்காரா மான், பிளாக் பக் மான், சாம்பார் மான், நான்கு கொம்பு கலை மான், குள்ள நரி, முயல், நரி, சிறுத்தை போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. இவை தவிர பலவகை பறவை வகைகளையும் பறவை ரசிகர்கள் இங்கு காணலாம். பருந்து, குக்கூ, மீன்கொத்தி, புறா, புல்புல், கழுகு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.ஜனவரியிலிருந்து ஜூன் வரை உள்ள காலம் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்க்க ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம்
திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் 148 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இது யாவத்மால் மாவட்டத்தில் பந்தகவாடா தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் தெற்குப்பிரதேச வறண்ட ஈரக்காடுகளும் மலைப்பாங்கான பசுமைச்சமவெளிப்பகுதிகளும் புதர்க்காடுகளும் காணப்படுகின்றன. அயோலா, அயின் மற்றும் தேக்கு மரங்கள் இங்குள்ள மரங்களில் குறிப்பிடத்தக்கவை. கறுப்புமான், புள்ளிமான், குரங்கு, சாம்பார் மான், முயல் போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கும் சில குறிப்பிடத்தக்க விலங்குகளாகும்.கோடைக்காலம் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும். யாவத்மால் ரயில் நிலையம் வழியாக இந்த சரணாலயத்தை சுலபமாக சென்றடையலாம்.