யோகா அத்தனை அருமையான கலை.. விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்வதுடன், அதை தினமும் செய்து மகிழ்வது ஒரு வித புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் ஊக்குவிக்கும் வித்தையாகும் என்று பலர் கூறுகின்றனர். சரி,. இந்தியாவில் யோகா செய்ய சிறந்த இடங்களைப் பற்றி காண்போமா?
கேரளா
கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர்.
உத்தரகண்ட்
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. ‘தேவர்களின் பூமி' என்றும் ‘பூலோக சொர்க்கம்' என்றும் அழைக்கப்படும் இந்த எழிற்பிரதேசத்தின் அழகு வாழ்நாளில் ஒருமுறை இந்தியர் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.
கோவா
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும். கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள்.
பாண்டிச்சேரி
மாறுபட்ட அனுபவங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாண்டிச்சேரி சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும். ப்ரோமெனேட் கடற்கரை (வீதி உலா கடற்கரை), பாரடைஸ் கடற்கரை, செரினிட்டி கடற்கரை மற்றும் ஆரோவில் கடற்கரை ஆகியவை பாண்டிச்சேரிக்கு விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியளிக்க காத்திருக்கும் நான்கு சிறந்த கடற்கரைகளாகும். கடற்கரைகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகச்சிறந்த தியான மையங்களில் ஒன்றான அரவிந்தர் ஆசிரமமும் இங்கிருக்கிறது.
இமாச்சல பிரதேசம்
'கடவுள்கள் வாழும் பூமி' என்றும் 'தேவபூமி' என்றும் சிறப்பித்து போற்றப்படும் ஹிமாச்சல பிரதேசம் பசுமையான பள்ளத்தாக்குகள், கிறங்கடிக்கும் வெண்பனிச் சிகரங்கள், மனம் மயக்கும் ஏரிகள், பசும் புல் நிலங்கள் ஆகியவை புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த எழில் கொஞ்சும் மாநிலம் கிழக்கே திபெத் நாட்டையும், மேற்கே பஞ்சாபையும், வடக்கே காஷ்மீரையும் தன் எல்லைகளாக கொண்டுள்ளது. இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை நாட்டிற்கு பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தருகிறது.
மகாராஷ்டிரம்
இந்தியாவில் மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் உள்ளது. பற்பல சிறப்புகள் வாய்ந்த மகாராஷ்டிராவில் பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரைகளும், உயர்ந்து நிற்கும் மலைகளும், எண்ணற்ற அருங்காட்சியகங்களும், நினைவுச் சின்னங்களும், கோட்டைகளும் இந்தியாவின் வளமைமிக்க, புகழ்பெற்ற வரலாற்றின் உன்னத சாட்சிகள். மகாராஷ்டிரா என்ற பெயரிலுள்ள 'மகா' எனும் வார்த்தை 'சிறந்த' எனும் பொருளில் சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய சிறப்பியல்புகள். மகாராஷ்டிராவில் உள்ள 350 கோட்டைகளும் மராட்டிய மன்னர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 13 கோட்டைகள் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
கர்நாடகம்
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அமரக் காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன. கூர்க் மாவட்டம் அதன் பச்சை புல்வெளிகளை கொண்ட கவின் கொஞ்சும் பள்ளத்தாக்குகளால் இந்தியாவின் ஸ்காட்லேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த எழில் நகரம் கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கர்நாடகாவின் காப்பித் தோட்டமான சிக்மகளூர் மாவட்டமும், அம்மாவட்டத்தின் அழகிய அருவிகளுக்கு சொந்தமான கெம்மனகுண்டியும், பசுமையான குதுரேமுக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. கங்கை ஆற்றுப்படுகை இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பில் பரவியுள்ளது. அதனை ஒட்டி தெற்கே அமைந்துள்ள சுந்தர்பன் காடுகள் பசுமையான இயற்கைச்செழிப்புடன் வீற்றிருக்கின்றன. மேலும் இம்மாநிலத்தை ஒட்டி வடக்கில் நேபாள் மற்றும் பூடான் போன்ற நாடுகளும் கிழக்கில் பங்களாதேஷ் நாடும் அமைந்துள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் விரும்பும் வித்தியாசமான புவியியல் அமைப்பை இம்மாநிலம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி
பல அதிசயங்களை தன்னுள் பொதித்திருக்கும் அற்புத பொக்கிஷப்பெட்டி போன்று ‘புராதன'த்தையும் ‘நவீன'த்தையும் ஒருங்கே கொண்டுள்ள இந்த ‘டெல்லி' மாநகரமானது அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பெருநகரங்களில் ஒன்றாக கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஹிந்தியில் ‘டில்லி' என்று உச்சரிக்கப்படும் ‘டெல்லி' நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி (NCT - NATIONAL CAPITAL TERRITORY) எனப்படும் ‘தேசிய தலைநகர பிரதேசம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார்
பீஹார் மாநிலத்தில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் ஊற்றுகள் என்று ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. புராதன காலத்தில் இந்த பீஹார் பிரதேசம் அரசியல், கல்வி, நாகரிகம் மற்றும் மதம் போன்றவற்றின் உன்னத கேந்திரமாக திகழ்ந்திருந்தது. பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவுக்கு அருகில் முறையே 5ம் மற்றும் 8ம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா ஆகிய கல்விக்கூடங்கள் இன்றைய பல்கலைக்கழக முறைக்கு ஒரு முன்னோடியாக இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கல்வி மையங்கள் சர்வதேச அளவிலும் அக்காலத்தில் பிரசித்தமாக அறியப்பட்டிருக்கின்றன. இந்துத்துவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் மற்றும் இஸ்லாம் போன்ற அனைத்து மதங்களிலும் இந்த மாநிலம் ஒரு முக்கிய ஆன்மீக கேந்திரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
சிக்கிம்
சிக்கிம் இமயமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மலைசார்ந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 280மீ முதல் 8585மீ உயரம் வரை அமைந்துள்ள மலைப்பகுதிகளாகவே இருக்கின்றன. உலகின் 3-வது உயரமான சிகரமான கஞ்சஞ்ஜங்கா இங்கு அமைந்துள்ளது. கிழக்கில் பூட்டானையும், மேற்கில் நேபாளத்தையும், வடக்கே திபெத்தையும் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது சிக்கிம். ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமாக ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன. மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், சுடுநீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன. இயற்கையான 50 டிகிரி சூட்டில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. சிக்கிமின் மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளாக உள்ளது. மேலும் பனிகளால் நிரம்பிய பல ஓடைகள் சிக்கிமின் உயிர்நாடி என அழைக்கப்படும் தீஸ்தா நதியில் சங்கமிக்கின்றன.