இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிரம்பிய மலை வாசஸ்தலம் இந்த வாகமண் நகரமாகும். ஒரு சுவாரசியமான சுற்றுலாத்தலமான இது தேனிலவுப்பயணம் மேற்கொள்வோர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
பசுமையான சமவெளிப்பகுதிகள், வான்முட்டும் நீல மலைகள், வளைந்தோடும் ஆறுகள், பெருகி வழியும் நீர்வீழ்ச்சிகள், தூய்மை நிறைந்த குளுமையான காற்று மற்றும் அடர்ந்த பைன் மரக்காடுகள் போன்ற எழில் அம்சங்கள் இந்த வாகமண் மலைவாசஸ்தலத்தை பலரும் விரும்பும் சுற்றுலா பூமியாக மாற்றியுள்ளன.
தங்கல் மலை, முருகன் மலை மற்றும் குரிசுமலா போன்ற மலைகள் இந்த நகரத்தை சூழ்ந்து ஒரு பிரமிப்பூட்டும் இயற்கை அழகை அளித்துள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்கள்
அழகுக்காட்சிகள் மட்டுமல்லாது ஏராளமான பொழுது போக்கு அம்சங்களும் இந்த வாகமண் நகரில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. பாறையேற்றம், மலையேற்றம், சிகரமேற்றம் மற்றும் பாராசூட் பறப்பு போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு இந்த மலைவாசஸ்தலம் உகந்ததாய் விளங்குகிறது.
சாகசப்பொழுதுப்போக்குகள் உங்களுக்கு பொருத்தப்படாது எனில் இருக்கவே இருக்கிறது அழகிய மலைக்காட்சிகளும், பல வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் பூச்செடிகளும், ஆர்க்கிட் தாவரங்களும். அவற்றை பார்த்து ரசிப்பதற்கே நமக்கு நேரம் போதாது என்பதே உண்மை.
இந்த மலை நகரம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து’ என்றும் இந்த வாகமண் நகரம் குறிப்பிடப்படுகிறதென்றால் அதன் அழகு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்வதில் நிச்சயம் உங்களுக்கு சிரமம் இருக்காது.
இந்தியாவில் விஜயம் செய்ய வேண்டிய 50 அழகு பிரதேசங்களில் இதுவும் ஒன்று என்றும் ‘நேஷனல் ஜியாகிரபிக் டிராவலர்’ வழிகாட்டி கூறுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மலைப்பிரதேசம் கண்டறியப்பட்டு தோட்டப்பயிர்களுக்கு உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது. அவர்களை தொடர்ந்து இப்பகுதிக்கு வந்த கிறித்துவ மதப்பிரச்சாரகர்கள் இங்குள்ள குரிசுமலா பகுதியில் தங்கள் கேந்திரத்தை அமைத்துக்கொண்டனர்.
பயண வசதி மற்றும் இதர தகவல்கள்
கோட்டயத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் வாகமண் அமைந்துள்ளது. இந்த மலை நகரத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம் கொச்சி சர்வதேச விமான நிலையமாகும்.
வாகமண் மலைவாசஸ்தலத்தை சுற்றி நிறைய ரிசார்ட் விடுதிகள் நடுத்தரமான கட்டணங்களுடன் அமைந்துள்ளன. தேக்கடி, பீர்மேடு மற்றும் குளமாவு போன்ற இதர சுற்றுலாத்தலங்களும் வாகமண் நகரத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் பயணிகள் அவற்றுக்கும் விஜயம் செய்து ரசிக்கலாம். வருடம் முழுவதுமே வாகமண் பகுதியில் இனிமையான பருவநிலை நிலவுகிறது.