கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமே இந்த ‘வர்கலா’ ஆகும். கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடம் இது. அரபிக்கடலுக்கு அருகிலேயே உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்நகரின் தனித்தன்மையான அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்த வித்தியாசமான புவியியல் அமைப்புக்கு ‘வர்கலா அமைப்பு’ என்றே பெயரிட்டுள்ளது. பத்து அழகான கடற்கரைகளுள் ஒன்றாக இந்த வர்கலா கடற்கரையை டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி மதிப்பிட்டுள்ளது.
புராணிக பின்னணி
பலவிதமான புராணிகக் கதைகள் இந்த வர்கலா நகரம் பற்றி கூறப்பட்டாலும், அவற்றுள் ஒன்று பாண்டிய ராஜ வம்ச அரசர் ஒருவரிடம் அவரது பாவங்களிலிருந்து விடுபட பிரம்மா தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு ஆணையிட்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு கதையில் நாரத முனிவரானவர் பாவ காரியங்களில் ஈடுபட்டு அதிலிருந்து விடுபடுவதற்காக தன்னை வணங்கிய பக்தர்களுக்காக தனது மரவுரியை கழற்றி எறிந்ததாகவும் அது மண்ணுலகில் விழுந்த இடத்தில் பிரார்த்திக்குமாறு சொன்னதாகவும் கூறப்படுகிறது.
‘வல்கலம்’ எனும் சொல்லுக்கு மரவுரி என்பது பொருளாகும், எனவே நாரத முனிவரின் மரவுரி வந்து விழுந்த இந்த இடம் வர்கலா என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
சுற்றுலாவுக்கான அனைத்தும் உண்டு
வர்கலா நகரமானது புகழ்பெற்ற ஹிந்து மற்றும் இஸ்லாமிய யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது. சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், கடுவாயில் ஜும்மா மசூதி, வர்கலா பீச், பாபநாசம் பீச், கப்பில் ஏரி, அஞ்செங்கோ ஃபோர்ட், வர்க்கலா சுரங்கப்பாதை, சிவ பார்வதி கோயில் மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.
வர்கலா பகுதியில் பல நீரூற்றுகளும் காணப்படுவதால் இந்த இடம் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது.
வர்கலா கடற்கரையில் பாராசூட் குதிப்பு, படகுப் பாராசூட் சவாரி போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். கடற்கரைக்கு அருகிலேயே உல்லாச பொழுதுபோக்குக்கு ஏற்ற கபில் ஏரி எனும் நீர்த்தேக்கப்பகுதியும் அமைந்துள்ளது.
இவைதவிர சிலக்கூர் பீச் எனும் மற்றொரு அழகிய கடற்கரையும் வர்கலா நகரத்துக்கு அருகில் உள்ளது. இது சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதற்கேற்ற ஸ்தலமாக விளங்குகிறது.
சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் அளவுக்கு இங்கு வசதிகள் செய்யப்படவில்லை என்றாலும் மாலை நேர நடைப்பயணத்துக்கு மிகவும் ஏற்ற கடற்கரை இது. பொன்னும்துருத்து தீவு அல்லது தங்கத்தீவு எனும் தீவுப்பகுதியும் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும். இந்த தீவில் 100 வருடங்கள் பழமையான ஒரு சிவன் பார்வதி கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்செங்கோ ஃபோர்ட் எனும் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமும் பயணிகளுக்காக வர்கலா நகரத்தில் உள்ளது. மேலும், வர்கலா சுரங்கப்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் போன்றவை இங்குள்ள ஏனைய குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சங்களாகும்.
வர்கலா கதகளி மையம் எனும் பாரம்பரிய கலை மையமும் பயணிகளை கவரும் ஒரு அம்சமாக வர்கலாவில் பெயர் பெற்றுள்ளது. இந்த மையத்தில் தினமும் பார்வையாளர்களுக்காக பிரத்யேக கதகளி நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.
கதகளி நிகழ்ச்சிக்கான அலங்காரங்களையும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே பயணிகள் பார்த்து ரசிக்கும்படியாக இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. நுணுக்கமான - அதிக நேரம் பிடிக்கும் கதகளி அலங்கார முறைகளை நேரில் பார்த்து ரசிப்பது ஒரு சுவராசியமான அனுபவமாக பயணிகள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.
இதே மையத்தில் மோகினியாட்டம் எனும் மற்றொரு நடனக்கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. வர்கலா நகரத்துக்குள்ளேயே இந்த கதகளி மையம் அமைந்துள்ளது.
புத்துணர்ச்சியூட்டும் யோகக்கலை
இங்குள்ள ‘காசி யோக அனுஷ்டான கேந்திரம்’ எனும் மையத்தில் யோகா பயிற்சிகள் மற்றும் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளலாம். இந்த மையம் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான யோகா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை மையங்களும் இங்குள்ளதால் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வர்க்கலா நகரம் மிகப்பொருத்தமான விடுமுறை ஸ்தலமாக உள்ளது.
ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரையிலான பயிற்சிகளும் சிகிச்சைகளும் இந்த மையங்களில் வழங்கப்படுகின்றன. சிவகிரி மடத்தில் தியானக்கலை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
வர்கலா கடற்கரைக்கு வெகு அருகிலேயே ஒரு இயற்கை மருத்துவ மையமும் அமைந்துள்ளது. பயணிகள் இங்கு ஆரோக்கிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.
போக்குவரத்து வசதிகள்
திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ வடக்கிலும், கொல்லம் நகரத்திலிருந்து 49 கி.மீ தென்மேற்கிலும் இந்த வர்க்கலா நகரம் அமைந்துள்ளது. கேரள மாநில அரசுப்பேருந்துகள் எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் வர்கலாவுக்கு இயக்கப்படுகின்றன. வர்கலாவில் ரயில் நிலையமும் உள்ளது. அருகிலுள்ள திருவனந்தபுரத்தில் விமான நிலையமும் உள்ளது.
பருவநிலை
கேரளாவின் எல்லா கடற்கரை நகரங்களையும் போலவே வர்கலா மிதமான பருவநிலையை கொண்டுள்ளது. இருப்பினும் குளிர்காலமே இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள பொருத்தமாக உள்ளது.