கோவாவின் மிகப்பெரிய நகரமான வாஸ்கோடகாமா, மர்மகோவா தீபகற்பத்தில் அமைந்திருக்கும் கோவாவின் முக்கியமான பொருளாதார மையமாகும். இந்த நகரம் மற்ற தெற்கு கோவா பகுதிகளை போல் அல்லாமல் மிகவும் பரபரப்பு மிகுந்தது.
அதோடு இந்த நகரம் கோவா விமான நிலையத்துக்கு வெகு அருகில் அமைந்திருப்பதாலும், நிறைய பாலிவுட் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டிருப்பதாலும் வாஸ்கோடகாமாவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம்.
இந்தப் பகுதியுள்ள போக்மாலு, பைனா, ஹன்சா, கிராண்ட்மதர்'ஸ் ஹோல் போன்ற கடற்கரைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இதில் கிராண்ட்மதர்'ஸ் ஹோல் என்ற கடற்கரையின் பெயர் குறித்து கேலியும், கிண்டலும்தான் அதிகம்.
ஆனால் உண்மையில் அதற்கு அப்படி பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது அலீஸா சாண்டா கேட்டரீனா என்ற சிதைந்த நிலையில் காணப்படும் கோட்டையிலுள்ள ஒரு சிறிய துவாரத்தில் புகுந்துதான் அந்தக் கடற்கரைக்கு செல்ல முடியும். எனவேதான் தான் அந்த கடற்கரை கிராண்ட்மதர்'ஸ் ஹோல் என்று அழைக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மீன்பிடிக்கச் சென்ற தன் பிள்ளைகளின் வருகைக்காக அந்த துவாரத்தின் அருகே மூதாட்டி ஒருவர் தினந்தோறும் காத்திருந்ததால் இதற்கு கிராண்ட்மதர்'ஸ் ஹோல் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கிராண்ட்மதர்'ஸ் ஹோல் பீச் சிறியதாக இருந்தாலும் எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையின் அற்புத சூழலை பயணிகள் கண்டிப்பாக விரும்புவார்கள். மேலும், இங்கு நீங்கள் கோவாவின் மற்ற கடற்கரைகளில் பார்ப்பது போல குடில்கள் ஒன்றையும் பார்க்க முடியாது.
கிராண்ட்மதர்'ஸ் ஹோல் பீச்சிலிருந்து ஃபெர்ரி சேவை மூலம் நீங்கள் சுலபமாக டோனா பௌலா கடற்கரையை அடைந்து விடலாம். டோனா பௌலா நகரம் ஷாப்பிங் போன்ற விஷயங்களுக்காக மிகப்பிரபலம். அதோடு பனாஜி நகருக்கு வெகு அருகிலேயே டோனா பௌலா நகரம் அமைந்திருக்கிறது.
போக்மாலு கடற்கரைக்கு அருகில் உள்ள நேவல் மியூசியம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு நீங்கள் போர்த்துகீசியர்களின் காலத்திலிருந்து தற்போது வரையிலான கோவாவின் கப்பல் படை வரலாற்றை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் 1624-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை, வர்கா கடற்கரையின் அருகே மார்கோ துறைமுகத்தின் நுழைவாயிலாய் உயர்ந்து நிற்கும் பாங்கை பயணிகள் கண்டிப்பாக காண வேண்டும். இங்கு தொன்மை வாய்ந்த கல்வெட்டுகள் சில பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வாஸ்கோவில் சிவாஜி மகாராஜாவின் நினைவாக கட்டப்பட்ட சிவாஜி கோட்டைக்கும் பயணிகள் சென்று பார்க்கலாம். இந்த இடங்களை எல்லாம் சுற்றிக்காட்ட ஏராளமான வழிகாட்டிகள் வாஸ்கோ நகரில் உங்களுக்காக காத்துக்கிடக்கிறார்கள்.
வாஸ்கோடகாமா நகரிலேயே ரயில் நிலையம் இருப்பதால் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் இந்த நகரை சுலபமாக அடைந்து விடலாம். மேலும் தபோலின் விமான நிலையமும் நகர மையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.
அதோடு தபோலிம் விமான நிலையத்துக்கு மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலிருந்து ஏராளமான விமானங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன. அதுமட்டுமல்லாமல் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களிலிருந்து எண்ணற்ற வால்வோ பேருந்துகள் வாஸ்கோவுக்கு இயக்கப்படுகின்றன.