மஹராஷ்டிரா மாநிலத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள விஜயதுர்க் ஒரு சிறிய அழகான நகரம். மும்பையிலிருந்து 485 கி.மீ தூரத்தில் சிந்துதுர்கா மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இது முன்னர் கெரியா என்றும் அழைக்கப்பட்ட்து. அரபிக்கடலுக்கும் சஹயாத்ரி மலைத்தொடருக்கும் இடையில் மிக அமைதியான இயற்கை சூழலில் வீற்றிருப்பதால் இந்த நகரம் அவசியம் விஜயம் செய்யவேண்டிய இடங்களில் ஒன்றாகிறது.
மராத்திய ஆட்சியின்போது இந்த விஜயதுர்க் நகரமும், சிந்துதுர்க் மாவட்டமும் முழுக்க முழுக்க ஒரு கப்பற்படை மையம் மற்றும் துறைமுகமாக விளங்கியிருந்தது. இப்போதும் இங்கு துறைமுகம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு வார கடும் உழைப்புக்குப் பின்னர் மனதை லேசாக்கிக்கொள்ளவும் புத்துணர்ச்சியூட்டவும் மிக பொருத்தமான இடம் இந்த விஜயதுர்க். தூய்மையான கடற்கரை, வரலாற்றுப்பின்னணி கொன்ட புராதன கோட்டைகள் என பலவகை அம்சங்களை விஜயதுர்க் நகரம் ஒரு உண்மையான - மாற்றம் விரும்பும் சுற்றுலாப்பயணிக்கு அளிக்கிறது.
இங்குள்ள கடற்கரையை ஒட்டியே தென்னை மரங்களுடனும், பனை மரங்களுடனும் கூடிய பசுமையான வளமான காடு காணப்படுகிறது. இந்தப்பகுதியை சுற்றிலும் காணப்படும் மாந்தோப்புகளிலிருந்து எச்சில் ஊற வைக்கும் அல்போன்ஸா மாம்பழங்களின் வாசனை கோடைக்காலத்தில் தவழ்கிறது.
செம்மர பலகைகளால் ஒரே மாதிரி கட்டப்பட்டிருக்கும் வீடுகளும் அவற்றின் நுட்பமான மேற்கூரைகளும் விஜயதுர்க் நகரத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் கவர்ச்சியை கொடுக்கின்றன.
விஜயதுர்க் கோட்டை – ஒரு கட்டிடக்கலை அதிசயம்!
விஜயதுர்க் நகரம் இங்குள்ள கோட்டைக்கு பெயர் பெற்றது. விஜயதுர்க் கோட்டை என்றே அழைக்கப்படும் இந்த கோட்டைக்கு வெற்றிக் கோட்டை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
மராத்திய ஆட்சியின்போது மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்ட பெருமையை கொண்டது இந்த விஜயதுர்க் கோட்டை. 300 வருடங்களுக்கு முன் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மூன்று புறம் கடலால் சூழப்பட்டிருப்பதால் கெரியா என்ற பெயரும் இதற்கு உண்டு.
பேஷ்வாக்கள் மற்றும் மராத்திய ஆட்சிகளின் போது விஜயதுர்க் கோட்டை ஒரு பலமான சக்தி மையமாக விளங்கியது. இக்கோட்டையை வென்று கொள்ளயடிக்க முயன்ற அயல் நாட்டு எதிரிகளுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது.
கோட்டையைச் சுற்றி மூன்று அடுக்குகளாக பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. காவல் கோபுரங்களும் அரண்களும் கொண்ட இந்த கோட்டை மிகப்பலம் வாய்ந்த்தாக திகழ்ந்திருக்கிறது. 17 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட பிரம்மாண்ட கோட்டையானது ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக்கோட்டைக்கு அகஸ்டஸ் கோட்டை அல்லது சமுத்திர கோட்டை என்று மறுபெயரிட்டனர்.
இப்படிப்பட்ட பின்னணியை உடைய விஜயதுர்க் கோட்டை கட்டிடக்கலையில் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளை மிகவும் வசீகரிக்க கூடியது.
இந்தக்கோட்டையின் கட்டுமான நுட்பத்தின் அடிப்படை மாமன்னர் சிவாஜி இந்த கோட்டையின் இருப்பிடத்தை சாதுரியமாக தேர்ந்தெடுத்திருப்பதில் அடங்கியிருக்கிறது. கோட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கர்பேதன் கால்வாய் மற்ற பெரிய கப்பல்களும் படகுகளும் இந்தப்பகுதியில் நுழைவதை தடுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மராத்திய மன்னர்கள் போர்க்கப்பல்களை நிறுத்துவதற்கும் இந்த கோட்டைப்பகுதியை பயன்படுத்தியிருந்தனர். அதனாலேயே இக்கோட்டை கிழக்கின் ஜிப்ரால்டர் என்ற பெயரையும் கூட பெற்றிருந்தது.
கடல் பாதுகாப்புக்காக ஒரு மேடை ஒன்றும் இங்கு அரபிக்கடலில் கட்டப்பட்டிருப்பதை காணலாம். இந்த மேடை சுற்றுலாப்பயணிகள் அவசியம் காணவேண்டிய ஒன்று.
கோட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மராத்திய போர்க்கப்பல்கள் செப்பனிடப்பயன்பட்ட கப்பல் தளம் காணப்படுகிறது.மாமன்னர் சிவாஜி தனது செங்கொடியை பிரத்யேகமாக ஏற்றிய இரண்டே இரண்டு கோட்டைகளில் இந்த விஜயதுர்க் கோட்டையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கோட்டை தோரணா கோட்டை ஆகும். விஜயதுர்க் அருகில் உள்ள பல கோயில்களில் மாருதி மஹாபுருஷ் போன்ற தெய்வங்களின் சிலைகள் காணப்படுகின்றன.
ராமெஷ்வர் கோயில் என்றழைக்கப்படும் புரதானமான பழமை வாய்ந்த கோயில் ஒன்றும் இங்குள்ளது. இது ஹிந்து பக்தர்கள் மத்தியில் பிரபல்யமான கோயில் ஆகும்.
மறக்காமல் அனுபவிக்க வேண்டியவை
விஜயதுர்க் சென்று அங்குள்ள உணவின் சுவையை யாராலும் ருசிபார்க்காமல் வரமுடியாது. மல்வனி கறி குறிப்பாக இங்கு பிரசித்தம். சொல்கதி எனும் மற்றும் ஒரு அம்சம் இங்கு அவசியம் சுவைக்க வேண்டியன. மீன் பிரியர்களுக்கு இங்கு பலவிதமான மீன்வகைகள் கிடைக்கும்.
இங்குள்ள மக்கள் அன்போடு உபசரிக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்கும் வசதிகள் உண்டு. கோடைக்காலத்தில் விஜயதுர்க் நகரத்துக்கு செல்லும் பட்சத்தில் அல்போன்ஸா மாம்பழமும் சுவையான பலாப்பழமும் நிச்சயம் கிடைக்கும். இங்குள்ள முந்திரி தொழிற்சாலைக்கு சென்று முந்திரி பதப்படுத்தப்படுவதையும் காணலாம்.
விஜயதுர்க் – சில கூடுதல் தகவல்கள்
மிதமான வறண்ட பருவநிலை நிலவுவதால் வருடந்தோறும் வெப்பநிலை சீராக காணப்படுகிறது. ஆனாலும், அதிக வெப்பம் காரணமாக கோடைக்காலம் இங்கு பயணம் செய்வதற்கு ஏற்றதல்ல என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
மழைக்காலத்தில் அபரிமிதமான மழை பொழிவதால் இந்தப்பகுதி அச்சமயம் மிகுந்த எழிலுடன் காட்சியளிக்கும். இருப்பினும், குளிர் காலமே இப்பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.
இங்குள்ள ஒவ்வொரு அம்சத்தையும் கண்டு அனுபவிக்க குளிர்காலம் மிகவும் உகந்தது. வெப்பநிலை குறைவாகவும் இதமாகவும் குளிர்காலத்தில் காணப்படும்.
விஜயதுர்க் மஹாராஷ்டிராவின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் பக்கத்து மாநிலங்களிலிருந்தும் எளிதில் செல்லும்படி சாலை இணைப்புகளுடன் அமைந்துள்ளது. ஆகாய மார்க்கம் எனில் அருகில் பனாஜி விமான நிலையம் இருக்கிறது.
அங்கிருந்து வாடகைக்காரின் மூலம் விஜயதுர்க் வந்தடையலாம். ரயில் மார்க்கம் என்று பார்த்தால் கூடல் மற்றும் ராஜாபூர் என்ற இரண்டு ரயில் நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் இறங்கி விஜயதுர்க் செல்லலாம்.
இது தவிர மும்பை மற்றும் புனேயிலிருந்து அரசுப்போக்குவரத்து பஸ்களும் தனியார் பஸ்களும் பயணிகளுக்க்காக அதிக அளவில் இயக்கப்படுகின்றன.