மகாராஷ்டிரா மற்றும் கோவா எல்லையில் அமைந்திருக்கும் பேர்நெம் நகரம் அமைதியும், பேரழகும் வாய்ந்த கடற்கரைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சப்போரா மற்றும் திராகோல் நதிகளில் நாட்பூராவும் மீன்பிடித்து உங்கள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதுமட்டுமில்லாமல் பல ஆண்டுகளுக்கு முந்தைய கோவாவின் தோற்றத்தை நீங்கள் காண விரும்பினால் பேர்நெம் நகருக்குத்தான் வர வேண்டும்.
மும்பை மற்றும் புனேவில் வசிக்கும் மக்களுக்கு பேர்நெம் நகரம் பல ஆண்டுகளாக விருப்பமான விடுமுறை காலஸ்தலமாக இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஸ்ரீ பகவதி கோயில் மற்றும் தேஷ்பிரபு இல்லம் ஆகிய இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
இதில் தேஷ்பிரபு இல்லம் எனும் மிகப்பெரிய மாளிகையில் வசித்த தேஷ்பிரபு என்பவர்தான் உலகிலேயே பிரபுப்பட்டம் பெற்ற ஒரே ஹிந்து ஆவார். இந்தப் பிரபுப் பட்டம் என்பது ஐரோப்பாவை பொறுத்த வரை மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. இதுதவிர பகவதி கோயிலில் காணப்படும் யானைகளின் நினைவுச் சின்னங்கள் பயணிகளிடையே மிகப்பிரபலம்.
கோவாவை வடதிசையிலிருந்து அடைவீர்களானால் நீங்கள் முதலில் வந்து சேரும் இடம் பேர்நெம்மாகத்தான் இருக்கும். இந்த பேர்நெம் நகரம் கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
எனவே பனாஜியிலிருந்து, பேர்நெம் நகரை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். மேலும் வானிலை அனுமதித்தால் பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கூட பேர்நெம் நகருக்கு பயணிக்கலாம்.