ஒடிஷா மாநிலத்திலுள்ள மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோராபுத் ஜெய்பூர் நகரத்திலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகள், தனித்தன்மையான காட்டுயிர் அம்சங்கள் மற்றும் பசுமையான வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் என்று பல்வேறு அம்சங்களுக்கு இந்த நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது.
இங்குள்ள பழங்குடி மக்கள் ஆதிவாசி என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தற்போது நவீன வாழ்க்கை முறைகளுக்கு மாறத்துவங்கி விட்டனர் என்றாலும் சில அடிப்படையான பாரம்பரிய அம்சங்களை இன்றும் இவர்கள் மத்தியில் காணலாம். ஜகந்நாதருக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு புராதனமான கோயில் ஒன்றும் இந்நகரத்தில் உள்ளது.
இந்த கோயிலின் விசேஷ அம்சமாக இதன் உள்ளே எல்லா மதப்பிரிவினர்களும் அனுமதிக்கப்படுவதை குறிப்பிடலாம். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
மச்சகுண்ட், கோலாப் மற்றும் பன்சிதார் போன்ற ஆறுகள் இந்த பகுதியில் வழியே பாய்கின்றன. வித்தியாசமான தாவர வகைகள், செழிப்பான பள்ளத்தாக்குகள், உயர்ந்தோங்கிய மலைகள் மற்றும் நிரம்பி வழியும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை பெற்றுள்ளதால் இந்த கோராபுத் நகரம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபல்யமாக உள்ளது.



Click it and Unblock the Notifications