வெற்றி நகரம் என்ற பொருளைத்தரும் ‘ஜெய்பூர்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த வரலாற்று வாசனை வீசும் புராதன நகரம் ஒடிஷா மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். இது கொராபுத் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அடர்ந்த பசுமையான காடுகள், சலசலப்புடன் விழும் அருவிகள், புல்வெளிப்பிரதேசங்கள் மற்றும் வளம் நிரம்பிய பள்ளத்தாக்குகள் போன்றவற்றை இந்த ஜெய்பூர் பகுதி பெற்றுள்ளது.
ஒடிஷாவின் மிக முக்கியமான பழங்குடி இனத்தவர் இப்பகுதியில் வசிக்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். கிழக்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்நகரத்தின் மூன்று திசைகளிலும் அரக்கு மலை எனும் மலை U வடிவத்தில் சூழ்ந்திருக்கிறது. எனவே இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ரம்மியமான சூழலை இந்நகரம் கொண்டுள்ளது.
ஜெய்பூர் நகரத்தை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
ஷக்தி, பகரா மற்றும் துதுமா என்று அழைக்கபப்டும் கம்பீரமான மூன்று நீர்வீழ்ச்சிகள் இங்கு பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன. தேவ்மாலி எனும் மலைப்பள்ளத்தாக்கு மற்றும் சுனபேதா எனும் காட்டுயிர் சரகம், கோலாப் எனும் வசீகரமான ஆறு, கோராபுத் நகரம் போன்றவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
இவை தவிர மாலிகுரா எனும் இடத்திலுள்ள அகல ரயில் சுரங்கப்பாதை, நந்தபூர் எனும் இடத்தில் உள்ள பத்ரிஸா சிம்மாசனா, ஜெய்பூர் பூங்கா மற்றும் மின்னா ஜோலா எனும் சிறு நகரம் ஆகியவை ஜெய்பூர் சுற்றுலாவின் முக்கிய சுவாரசியங்களாக அமைந்துள்ளன. மேலும், பல புராதனமான அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் போன்றவையும் இந்நகரத்தில் உள்ளன.
எப்போது விஜயம் செய்யலாம்?
குளிர்காலப்பருவம் இந்த ஜெய்பூர் நகரை சுற்றிப்பார்ப்பதற்கு வசதியான சூழலை அளிக்கிறது.
எப்படி செல்லலாம் ?
ஜெய்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள விசாகப்பட்டிணம் விமான நிலையம் வழியாக இங்கு வரலாம். இது 237 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து பேருந்து மற்றும் ரயில் பயணம் மூலமாக அரக்கு மலைகளின் அழகை ரசித்தபடியே பயணிகள் ஜெய்பூர் நகரத்துக்கு வரலாம்.