மலே மகாதேஸ்வரா குன்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக மகாதேஸ்வரா கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்தக் கோயிலை சுற்றி கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை சேர்ந்த 77 குன்றுகள் அமைந்திருக்கின்றன.
இதன் முதன்மை தெய்வமான மகாதேஸ்வரா, சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்று என்று புராணம் கூறுகிறது. இப்பகுதியை சேர்ந்த மக்களும், மகாதேஸ்வரர் இந்தக் குன்றில் கடும்தவம் புரிந்ததாகவும், இப்போதும் இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் வடிவில் மகாதேஸ்வரர் வாழ்ந்து வருவதாகவும் நம்புகின்றனர்.
அதோடு மகாதேஸ்வரரின் திறமைகளையும், அவர் செய்த அற்புதங்களையும் இப்பகுதி மக்கள் பாடல்களாகவும் பாடி மகாதேஸ்வரரின் பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தப் பாடல்களில் மகாதேஸ்வரர் எப்படி தன்னுடைய புலி வாகனத்தில் வலம் வந்து குன்றில் வாழ்ந்த ரிஷிகளையும்,மக்களையும் ரக்ஷித்தார் போன்ற புராணச் செய்திகள் பொதுவாக இடம் பெறும்.அதுமட்டுமல்லாமல் காடு குருபர்கள், ஜெனு குருபர்கள் உள்ளிட்ட பழங்குடி இனத்தவர்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து வருகிறார் மகாதேஸ்வரர்.
மேலும் இக்குன்றில் மகாதேஸ்வரர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மகாதேஸ்வரா கோயிலில் உள்ள ஓடையான அந்தாரகங்கெவின் நீர் புனித தீர்த்தமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இது எங்கிருந்து தோன்றுகிறது என்பது இன்றுவரையிலும் மர்மமாகவே இருக்கிறது.