கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாஸ்தலங்களில் பேலூர் நகரமும் ஒன்று. ஹாசன் மாவட்டத்தில் உள்ள இந்த கோயில் நகரம் பெங்களூர் நகரத்திலிருந்து 220 கிலோமீட்டர் பயண தூரத்திலேயே உள்ளது. அதிகமான கோயில்களைக் கொண்டுள்ளதால் இது தென்னிந்தியாவின் ‘பெனாரஸ்’ அல்லது ‘தக்ஷிண காசி’ என்று அறியப்படுகிறது.
வரலாற்றுப்பின்னணி
வரலாற்றுக்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இந்த பேலூர் திகழ்ந்துள்ளது. ஹொய்சளர்களின் மற்றொரு தலைநகரமான ஹலேபீட் இங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஹொய்சள கட்டிடக்கலையின் புகழ்வாய்ந்த அடையாளங்களாக கருதப்படும் இந்த இரண்டு நகரங்களும் சேர்ந்தே சுற்றுலா ஸ்தலமாக அறியப்படுகின்றன.
பேலூரிலுள்ள உன்னதமான கோயில் வளாகமாக சென்னகேசவா கோயிலைக்குறிப்பிடலாம். விஷ்ணுவுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலில் பிரம்மாண்டமாய் உயர்ந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் வாயில் கட்டமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. உயிர்பெற்று எழுமோ என்று பிரமிக்கக்கூடிய நேர்த்தியுடன் வடிக்கப்பட்ட பல சிற்பங்கள் இந்த கோயிலில் நிறைந்துள்ளன.
இந்த கோயில் தென்னிந்திய சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த கோயிலை கட்டி முடிக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆனதாக கூறப்படுகிறது.
பேலூர் பகுதியில் இதர முக்கியமான காணக்கூடிய அம்சங்களாக தொட்டகடவல்லியில் உள்ள லட்சுமி தேவி கோயில் மற்றும் சிரவணபெலகொலாவில் உள்ள ஜைனக்கோயில்கள் போன்றவற்றைக் கூறலாம்.
பேலூர் நகரம் சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் பாதையால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அருகாமை ரயில் நிலையம் 38 கி.மீ தூரத்தில் உள்ள ஹாசன் ரயில் நிலையம் ஆகும். பேலூரிலிருந்து ஹாசன், பெங்களூர், மங்களூர் மற்றும் மைசூருக்கு அதிக எண்ணிக்கையில் மாநில அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.