மரவந்தே நகரம் தனது வலது புறத்தில் அரபிக்கடலையும், இடது புறத்தில் சௌபர்ணிகா நதியையும் கொண்டு, அதன் நடுவே ஒரு சொர்க்க பூமியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இது கர்நாடகாவின் தெற்கு கன்னரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மரவந்தேவின் கடற்கரையில் மனிதனின் கால்தடம் படாமல் பல மைல்கல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பின் புனிதத் தன்மையை குறிக்கும் விதமாக இதற்கு கன்னிக் கடற்கரை என்று பெயர் வந்தது. மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான இது கொல்லூருக்கும், கொடச்சத்ரி குன்றுக்கும் அருகில் உள்ளது.
கன்னிக் கடற்கரையின் கரையோரத்தில் ஓங்கி வளர்ந்து நிற்கும் பனை மரங்களும், எல்லையில்லாமல் பரந்துக் கிடக்கும் மணற்பரப்பும், ஆரவாரமில்லாமல் காணப்படும் சமுத்திரமும் உங்கள் மனதை சாந்தப் படுத்தி சுற்றுலா வந்த அனுபவத்தை இன்பமயமாக ஆக்கும்.
கடற்கரை நகரமான மரவந்தேவின் கடலில் நீச்சல் அடிப்பது மற்றும் 'ஸ்கூபா டைவிங்' என்று அழைக்கப் படும் கடலின் அடி ஆழம் வரை சென்று வருவது போன்ற போழுபோக்குகளில் பயணிகள் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள்.
அதே போல் நீங்கள் சௌபர்ணிகா நதியில் படகு சவாரி செல்லலாம். அந்த நதியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டது என்று சொல்லப்படுகிறது.
மரவந்தேவுக்கு அருகில் உள்ள கொல்லூர் என்ற சிறு நகரத்தில் பயணிகள் மனம் கவரும் வகையில் பல சுற்றுலா மையங்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோயில், குந்தபுரா, கஞ்சுகோடு, பெலக்கா தீர்த்த அருவி மற்றும் சூரிய அஸ்த்தமனத்துக்காக பேர்போன பைந்தூர் கிராமம் ஆகியவை கொல்லூரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தான் அமைந்திருக்கிறது. அதே போன்று கொடச்சத்ரி குன்று சாகசப் பிரியர்களின் சிறந்த தேர்வாக இருக்கும்.