பத்ரா காட்டுயிர் சரணாலயத்துக்காக இந்த பத்ரா சுற்றுலாஸ்தலம் பிரசித்தமாக அறியப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த காட்டுயிர் சரணாலயம் சமீபத்தில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான வனப்பகுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் செழிப்பான வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பத்ரா காட்டுயிர் சரணாலயம் 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜகரா வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதி ஒரு காட்டுயிர் சரணாலயமாக மாற்றப்பட்டு பத்ரா காட்டுயிர் சரணாலயம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் காட்டுப்பகுதியின் எல்லைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
சுமார் 492 ச.கி.மீ மொத்த பரப்பளவைக் கொண்டுள்ள இந்த பத்ரா காட்டுயிர் சரணாலயமானது சிக்மகளூர் நகரத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலும் பெங்களூர் நகரத்திலிருந்து 282 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
காட்டுயிர் அம்சங்களின் காட்சி
இந்த சரணாலயத்தின் இலையுதிர் காடுகள் பல்வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்களை கொண்டுள்ளன. 120 க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு காணப்படுகின்றன. தேக்கு, கருங்காலி, மூங்கில், பலா போன்றவை இங்கு காணப்படும் சில மரங்களாகும்.
இங்கு பலவகையான மான்களான புள்ளி மான், சாம்பார் மான் மற்றும் குரைக்கும் மான் போன்றவற்றை பார்க்கலாம். காட்டெருமை, கருகுரங்கு, மந்திக்குரங்கு, தேவாங்கு, மலபார் ராட்சத அணில் மற்றும் யானைகள் ஆகியன இங்குள்ள சில குறிப்பிடத்தக்க உயிரினங்களாகும்.
சாகபட்சிணிகள் நிறைந்த பகுதி என்பதால் வேட்டை விலங்குகளான சிறுத்தை, காட்டு நாய், புலி போன்ற மிருகபட்சிணிகளும் இங்கு வசிக்கின்றன. குள்ள நரி, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளையும் இந்த காட்டுயிர் சரணாலயத்தில் பார்க்கலாம். இதுதவிர சிறு விலங்குகளான கீரி, நீர் நாய், சிறுத்தைப்பூனை போன்றவையும் இங்கு அதிக அளவில் வசிக்கின்றன.
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் அங்கமாக இந்த காட்டுயிர் சரணாலயம் 1998ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 250க்கும் மேற்பட்ட பறவை வகைகள் வசிக்கும் காட்டுயிர் சரணாலயமான இது பறவை ஆர்வலர்கள் விரும்பும் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. கிளிகள், புறாக்கள், கௌதாரி, காட்டுக்கோழி, புதர்க்காடை, பச்சைக்கிளி, மரகதப்புறா, மைனா மற்றும் மரங்கொத்திகள் போன்றவை இங்கு காணப்படும் சில குறிப்பிடக்கூடிய பறவைகளாகும்.
உங்களுக்கு ஊர்வன ஜந்துக்களை பிடிக்கும் என்றால் (அதாவது அவற்றை பார்ப்பதோ அல்லது தெரிந்துகொள்வதோ) இந்த காட்டுயிர் சரணாலயத்தில் கருநாகம், கண்ணாடிவிரியன், நாகம், சாரைப்பாம்பு, குழி விரியன் போன்றவை உள்ளன எனும் தகவல் தேவையாய் இருக்கலாம். இதர விலங்குகளான இந்திய ராட்சத பல்லி, முதலை போன்றவையும் இங்கு காணபடுகின்றன. மேலும் சில அற்புதமான வண்ணத்துப்பூச்சி வகைகளும் இந்த பத்ரா காட்டுயிர் சரணாலயத்தில் காணப்படுகின்றன.
இன்ன பிற தகவல்கள்
இங்குள்ள வனத்துறை அலுவலகமானது சுற்றுலாப்பயணிகளூக்கு மலையேற்றம், பாறையேற்றம், பறவை வேடிக்கை மற்றும் படகுச்சவாரி போன்றவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளையும் வசதிகளையும் வழங்குகிறது. காட்டுயிர் அம்சங்களுக்கு அப்பாற்பட்டு இந்த பத்ரா ஸ்தலத்தின் இயற்கை எழில் பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும் இயல்பை கொண்டுள்ளது.
மேலும் பத்ரா இந்த வனப்பகுதியில் ஓடும் ஆற்றின் துணை ஆறுகள், பத்ரா அணை நீர்த்தேக்கம் மற்றும் இந்த பிரதேசத்தை சூழ்ந்துள்ள ஹெப்பேகிரி, கங்கேகிரி, முல்லியநகரி, பாபா புதான் கிரி போன்ற மலைகள் இந்த பிரதேசத்தை ஒரு அற்புதமான இயற்கை எழில் ஸ்தலமாக ஜொலிக்க வைத்துள்ளன.