கட்டீல் நகரம் கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமாகும். இங்கு நந்தினி ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் துர்கா பரமேஸ்வரி கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து புனித யாத்ரிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவர்.
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி அருணாசுரன் என்னும் அரக்கனால் மிகக் கடுமையான பஞ்சத்தில் முழுகித் தத்தளித்து வந்தது. அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்த ஜபாலி முனிவர் வறுமையால் மக்கள் படும் துன்பத்தை தன் ஞானக் கண்ணால் கண்டு வருந்தினார். எப்படியாவது அவர்களின் துயரை துடைக்க வேண்டும் என்று எண்ணிய அவர் யாகம் வளர்த்து தெய்வப் பசுவான காமதேனுவை தருவிக்க எண்ணினார்.
அந்த நேரத்தில் காமதேனு வருணலோகம் சென்றிருந்ததால் அதன் மகளான நந்தினியை எடுத்துக் கொள்ளுமாறு தேவர்களின் தலைவனான இந்திரன், ஜபாலி முனிவரிடம் கூறினான். ஆனால் நந்தினி ஜபாலியுடன் செல்ல மறுத்துவிட்டது.
பூலோகத்தில் பாவிகள் மலிந்து கிடப்பதால் தான் அங்கு வர முடியாது என்று நந்தினி முனிவரிடம் தெரிவித்தது. எனினும் அங்கு மக்கள் படும் துயரத்தை எடுத்துக் கூறியும், நந்தினி அங்கு வந்தால் மட்டுமே அவர்களின் வறுமை ஒழியும் என்றும் ஜபாலி முனிவர் தயவு கூர்ந்து கேட்டுக் கொண்டார். அப்போதும் மனம் இரங்காமல் இருந்த நந்தினியை பூமியில் நதியாக விழுமாறு சாபமிட்டார் முனிவர்.
உடனே நந்தினி தன்னை, முனிவர் மன்னிக்க வேண்டும் என்றும், சாப விமோட்சனம் வழங்க வேண்டும் என்றும் மன்றாடிக் கேட்டுக் கொண்டது. அதற்கு ஜபாலி முனிவர், துர்கா தேவியை நோக்கி தவம் செய்யுமாறு நந்தினியை பணித்தார்.
நந்தினியும் கடுந்தவம் புரிய, அதன் முன்னே தோன்றிய துர்கா தேவி, நந்தினியை முனிவர் இட்ட சாபம் நிறைவேறும் பொருட்டு நதியாக விழுமாறு சொன்னாள். எனினும் நந்தினியின் சாபத்தை போக்க தானே நந்தினியின் மகளாக வந்து பிறப்பேன் என்றும் துர்கா தேவி உறுதி அளித்தாள்.
அன்றிலிருந்து நந்தினி, கனககிரி குன்றிலிருந்து நதியாக விழுந்து கட்டீலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு நந்தினி ஆற்றின் கரையில் யாகம் வளர்த்த ஜபாலி முனிவர் மழையை வரவழைத்து மக்களின் துயரை போக்கினார் என்பது புராணம் நமக்கு சொல்லும் செய்தி.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அருணாசுரன் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தான். அப்போது அவன் முன்பாக தோன்றிய பிரம்ம தேவன், இரண்டு மற்றும் நாலு கால் பிராணிகளால் அருணாசுரன் உயிருக்கு ஆபத்து நேராது என்றும், எந்த ஆயுதத்தாலும் அருணாசுரனை கொல்லமுடியாது என்றும் வரங்களை வழங்கினார். இதன் பின்னர் தேவர்களை போரில் வீழ்த்திய அருணாசுரனின் அட்டூழியங்கள் தாங்க முடியாமல் போகவே தேவர்கள் துர்கா தேவியிடம் முறையிட்டனர்.
உடனே அழகிய இளம் மங்கையாக உருமாறிய துர்கா தேவி அருணாசுரனின் முன்பாக தோன்றினாள். அவள் அழகில் மயங்கி அவள் பின்னால் சென்ற அருணாசுரன் ஒரு கட்டத்தில் வந்திருப்பது யாரென அறிந்து , துர்கா தேவியை கொல்ல முயன்றான். அப்போது திடீரென துர்கா தேவி கல்லாக மாறினாள். பின்னர் கல்லிலிருந்து வெளிப்பட்ட தேனீக்களின் கூட்டம் அருணாசுரன் சாகும் வரை அவனை கடுமையாக கொட்டித் தீர்த்தது.
அதன் பின் தேனீக்களின் ராணியான பிரம்மராம்பிகாவை சாந்த நிலைக்கு திரும்புமாறு தேவர்கள் வேண்டிக்கொண்டனர். அதன் படியே நந்தினி ஆற்றின் நடுவிலே தோன்றி அழகிய வடிவத்தில் துர்கா தேவி காட்சியளித்தாள். அதோடு தான் மகளாக பிறந்து நந்தினியின் சாபத்தை போக்குவதாக சொன்ன வாக்கையும் நிறைவற்றினால் துர்கா தேவி.
துர்கா தேவி வெளிப்பட்ட சிறு திட்டே இன்று கட்டீலாக அறியப்படுகிறது. அவள் எழுந்தருளிய இடத்தில் தான் இன்று துர்கா பரமேஸ்வரி கோயில் உள்ளது. சமஸ்கிருதத்தில் 'கட்டீ' என்றால் நடுவிலே என்றும், 'ல்லா' என்றால் நிலம் என்றும் அர்த்தம். நதியின் நடுவில் அமைந்திருப்பதால் கட்டீல்லா என்று பெயர் பெற்று, பின்னர் கட்டீல் என்று மாறியதாக சொல்லப்படுகிறது.
கட்டீலில் ஏப்ரல் மாதத்தில் 8 நாட்கள் நடைபெறும் மேஷ சங்கரமனா திருவிழாவும், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜன்மாஷ்டமி, மகா சுத்த பூர்ணிமா மற்றும் நவராத்திரி போன்ற திருவிழாக்களும் இப்பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.
இங்கு உள்ள கோயில் அறக்கட்டளை மூலமாக அன்னதானங்கள் வழங்குவதோடு, யக்ஷகானா போன்ற பாரம்பரிய கிராமியக் கலைகளையும் வளர்த்து வருகின்றனர்.