ஏரி நகரம் என்று அழைக்கப்படும் தானே நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று. 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டுள்ள இது 150 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. ‘ஷீ ஸ்தானக்’ என்றும் அழைக்கப்படும் தானே நகரம் மும்பையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.சால்செட் தீவில் அமைந்துள்ள தானே நகரம் கடல் மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் உயரத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காணப்படுகிறது. பார்சிக் மலை மற்றும் ஏயூர் மலை இரண்டும் அவற்றுள் குறிப்பிட த்தக்கவை.
தானே வரலாற்றுக்காலம்
ஏழு நூற்றாண்டுகளாக இந்திய வரலாற்றின் பக்கங்களில் தானே தன் தடத்தினை பதித்துள்ளது. இவற்றில் பழமையானதாக கீரேக்க புவிப்பயண வரலாற்றாசிரியரான டாலமியின் குறிப்புகளை சொல்லலாம். இவர் கி.பி135 லிருந்து கி.பி150 வரையான தனது குறிப்புகளில் தானே நகரத்தை ‘செர்சனோசஸ்’ என்று குறிப்பிடுகிறார்.
கி.பி 1321லிருந்து 1324 வரையான காலப்பகுதியில் வரலாற்று புகழ் பெற்ற பயணியான ‘ஃபிரையர் ஜோர்டானஸ்’ தானே நகரம் ஒரு முஸ்லிம் ஆட்சித்தலைவரின் கீழ் இருந்த தாக குறிப்பிடுகிறார்.
இபின் படுடா மற்றும் அபுல் ஃபெடா போன்ற வரலாற்றாசிரியர்களும் தானே நகரத்தினை ‘குகின் தானா’ என்ற பெயரில் குறிப்பிட்டு அது அக்காலத்தில் மிகவும் அழகுபொருந்திய ஒரு துறைமுகமாக விளங்கியதாக எழுதியுள்ளனர்.
இறுதியாக இங்கு 1530 ம் வருடத்தில் வந்திறங்கிய போர்த்துக்கீசியர் இந்த நகரத்தை ‘ககபே டே டானா’ என்று அழைத்தனர். அதன்பின்னர் இந்நகரத்தை மராத்திய வம்சத்தினர் கைப்பற்றி கடைசியாக இது ஆங்கிலேயர் வசம் சென்றது. ஆங்கிலேயர் இந்நகரத்தை ‘டானா’ என்று அழைத்தனர்.
தானே நகரத்தில் தவறவிடக்கூடாத சுற்றுலா அம்சங்கள்
இங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஏரிகள் காரணமாக தானே ஏரி நகரம் என்று அழைக்கப்படுகிறது. தானே மாவட்டப் பிரதேசம் முழுவதும் 30 ஏரிகள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றில் ‘மாசுண்டா தாலவ்’ என்று அழைக்கப்படும் ஏரி மிக அழகானதாக புகழ் பெற்றுள்ளது.
உள்ளூர் மக்களால் ‘தாலவ் பள்ளி’ என்றும் அழைக்கப்படும் இந்த ஏரியில் போட்டிங், வாட்டர் ஸ்கூட்டர் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது மட்டுமின்றி ஏயூர் மலைக்கும் நீலகண்ட மலைக்கும் இடையே அமைந்துள்ள ‘உப்வண்’ ஏரியும் மற்றொரு அழகு ஸ்தலமாக கருதப்படுகிறது.
காட்டுயிர் வளத்துக்கும் இயற்கை அழகுக்கும் பிரசித்தி பெற்ற ஏயூர் மலையில் சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. காஷி-மீரா எனும் மற்றொரு இயற்கை எழில் கொஞ்சும் ஸ்தலமும் இதன் அருகில் உள்ளது. தனேயில் அமைந்துள்ள ‘ஹர் ஹர் கங்கே அருவி’ இந்தியாவிலேயே பெரிய செயற்கை அருவியாக புகழ் பெற்றுள்ளது.
ஹேமந்த்பந்தி கலை பாணியில் அமைந்துள்ள அம்பர்நாத் கோயில் அல்லது அம்பரேஷ்வர் கோயில் என்று அழைக்கப்படும் தொன்மை வாய்ந்த கோயில் ஒரு முக்கியமான ஆன்மிக திருத்தலமாக புகழ் பெற்றுள்ளது.
வரலாற்றுப் பிரியர்களுக்கும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கும் பிடித்தமானதாக இங்கு ‘பேசைன் ஃபோர்ட்’ என்று அழைக்கப்படும் ‘வசாய் கோட்டை’ மற்றும் ஜவஹர் அரண்மனை போன்றவை அமைந்துள்ளன.
சாகச உல்லாச பிரியர்களுக்காக மலை ஏற்றம், பாறை ஏற்றம் போன்ற பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற ஸ்தலங்கள் இங்கு நிறைந்துள்ளன. அமைதியாக கடல் அருகே அமர்ந்து குடும்பத்துடன் கழிக்க விரும்பினால் அதற்கேற்றாற்போல் இங்கு ‘கெல்வா’ கடற்கரை உள்ளது.
மராத்தி கலாச்சாரம் பிரதானமாக காணப்படும் தானே நகரத்தில் கணேஷ் சதுர்த்தி, துர்கா பூஜா, கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. உள்ளூர் மக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைகளில் பங்கு கொள்வது மகிழ்ச்சியை தரும் ஒரு அனுபவமாகும்.
சில கூடுதல் தகவல்கள்
தட்ப வெப்ப நிலை என்று பார்த்தால் இந்த நகரம் மும்பையை மிகவும் ஒத்திருக்கிறது. பெரும்பாலும் ஈரப்பதம் மிகுந்த, வறண்ட தட்ப வெப்ப நிலையை இது பெற்றுள்ளது.
வருடம் முழுவதுமே சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இயல்பு கொண்டதாக இது அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் இப்பகுதி கடுமையான வெப்பத்துடன் அதிக பட்சமாக 40°C வரை போகும் அளவுக்கு காணப்படுகிறது.
இருப்பினும் சாதகமான புவியியல் அமைப்பு இந்த நகரத்தை வெப்பம் அதிகம் பாதிக்காத வகையில் காப்பாற்றுகிறது. கோடைக்கு பிறகு மழைக்காலத்தில் இங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி அழகு சேர்க்கின்றன.
ஆனாலும் வருடத்தின் கடைசியாக வரும் குளிர்காலமே இந்த பிரதேசத்துக்குரிய மிகச்சிறந்த பருவ காலமாக விளங்குகிறது. குளிர்காலத்தில் இந்த நகரத்தின் வெப்ப நிலை குறைந்தபட்சம் 10°C என்பதால் இந்த குளுமையான சூழல் பயணத்தையும் சுற்றுலாவையும் இனிமை வாய்ந்த அனுபவமாக மாற்றுகிறது.
பெரு நகரமான மும்பைக்கு அருகில் இருப்பதால் உலகின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் தானே நகரத்துக்கு மிக சுலபமாக வரலாம். பிரசித்தி பெற்ற மும்பை விமான நிலையம் மிக அருகில் இருப்பது தானே நகருக்கு ஒரு கொடுப்பினை என்றால் அது மிகையில்லை.
ரயில் மூலமான பயணமார்க்கத்துக்கும் மிகவும் ஏற்ற வகையில் தானே ரயில் நிலையம் பல மஹாராஷ்டிர மற்றும் வெளி மாநில நகரங்களை இணைக்கும் முக்கிய ரயில் சந்திப்பாக உள்ளது.
சாலைவழியாக காரில் பிரயாணிக்க நீங்கள் விரும்பினால் தானே நகரத்தை இணைக்கும் மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
தானே நகரம் ஒருவிதமான பன்முக நவீன கலாச்சாரத்தை அதன் அண்டை ‘மெட்ரோபாலிடன்’ நகரமான மும்பையிடமிருந்து பெற்றுள்ளது. தானே நகரம் வரலாற்று ரீதியாக பலவகையான உள்நாட்டு மற்று வெளிநாட்டு கலாச்சாரங்கள் வாய்க்கப்பட்ட பகுதியாக இருந்துள்ளது.
முஸ்லிம்கள் தொடங்கி மராத்தியர்கள் வரையான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் போர்த்துகீசிய, ஆங்கிலேய கலாச்சாரங்கள் இங்கு கலந்து காணப்படுகின்றன. இப்படி எல்லா வகை கலாச்சாரங்களும் கலந்து மிளிரும் நகரங்கள் இந்தியாவில் மிக க்குறைவு என்பதால் அற்புதமான வரலாற்று மகிமை கொண்ட இந்த நகரத்தை ஒரு முறையாவது விஜயம் செய்வது அவசியம்.