கடல் மட்டத்திலிருந்து 2286 மீ உயரத்தில் ருத்ரநாத் கோவில் அமைந்துள்ளது. இந்து கடவுளான சிவபெருமானின் கோவிலான இது மிகவும் மத முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும்.
இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் நீலகண்ட மகாதேவர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மகாபாரதப் போருக்குப் பிறகு சிவபெருமானிடம் பாவமன்னிப்பு வேண்டி பாண்டவர்கள் இமயமலைக்கு வந்தனர்.
அவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான் நந்தி எருதின் உருவத்தை எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டார். குப்தகாஷியில் அந்த எருதினை பார்த்த பாண்டவர்கள் அதனை பிடிக்க முயன்று தோற்றனர்.
அதன் பிறகு, சிவபெருமானின் உடல் பகுதிகள் ஐந்து துண்டுகளாக வேறு வேறு பகுதிகளில் கார்வாலை சுற்றிலும் கிடைத்தன. அந்த உடல் பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிதான் இன்றைய பஞ்ச கேதார் என்ற புனிதப்பகுதியாகும். சிவபெருமானின் முகம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தான் ருத்ரநாத் கோவில் கட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் சாகர் மற்றும் ஜோசிமாத் கிராமங்களில் இருந்து மலையேற்றம் செய்வதன் மூலம் ருத்ரநாத் கோவிலை அடைய முடியும். ஜோசிமாத்-ல் இருந்து செல்லும் வழி 45 கிமீ நீளமுடையது.
இந்த வழிப்பாதையில் ஹதி பர்வதம், நந்த தேவி, நந்த குன்டி மற்றும் திரிசூல் சிகரங்களின் மனதை மயக்கும் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் காணும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோவிலுக்கு அருகிலேயே புனிதமான குளங்களான சூரிய குந்த், சந்திர குந்த், தாரா குந்த் மற்றும் மனா குந்த் ஆகியவை அமைந்துள்ளன.