உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்புகளில் ஒன்றான இந்தியாவில், சட்டமியற்றும் அதிகாரம் பெற்ற மக்களவைகள் செயல்படும் அதி உச்ச இறையாண்மையின் பீடம் தான் இந்த பாராளுமன்ற மாளிகை அல்லது 'பார்லிமெண்ட் ஹவுஸ்' என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
டெல்லியில் சன்சத் மார்க் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள இந்த பாராளுமன்ற மாளிகையானது அற்புதமான தோற்றத்துடன் வட்ட வடிவில் கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த மாளிகையில் அமைச்சக அலுவலகங்கள், நிர்வாகக்குழு அறைகள் மற்றும் முக்கியமான புத்தகங்களின் சேகரிப்புகளைக்கொண்ட நூலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சரி இங்கு சென்று பார்க்கமுடியுமா என்றால் நிச்சயம் முடியும். அதற்கென தனி அனுமதி பெறவேண்டும். அதை எவ்வாறு பெறுவது என்னென்ன இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
அமைப்பு
வட்ட வடிவ கட்டமைப்பின் மையத்தில் ஒரு பெரிய கூடம் உச்சியில் குமிழ் மாடக்கூரையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆங்கிலேய கலையம்சங்களுடன் கட்டப்பட்டிருக்கும் இம்மாளிகையின் வெளி நடைக்கூடத்தில் 144 தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
யாரால் கட்டப்பட்டது தெரியுமா?
சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர் என்ற இரு ஆங்கிலேய கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு 1927ம் ஆண்டில் இந்த பாராளுமன்ற மாளிகை கட்டப்பட்டிருக்கிறது.
1946ம் ஆண்டு வரை காலனிய ஆட்சியில் மத்திய சட்டமியற்றும் குழுவுக்கான பிரத்யேக மத்திய நூலகமாக இந்த மாளிகை பயன்பட்டு வந்திருக்கிறது. பின்னர் இது அவைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது. இம்மாளிகையின் மையக்கூடம் இரண்டு காரணங்களுக்காக இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
வரலாறு
1947ம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரத்திலிருந்து விடுபட்டு நேருவின் தலைமையிலான தற்காலிக சுதந்திர அரசாக மாற்றம் பெற்றது மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்டது ஆகிய இரண்டு முக்கிய வரலாற்று சம்பவங்கள் இந்த மையக்கூடத்தில்தான் அரங்கேறியுள்ளன.
தற்போது இந்த மையக்கூடமானது லோக் சபா எனப்படும் மக்கள் அவை மற்றும் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்கள் அவை ஆகிய இரண்டு சபைகள் கூடி விவாதிக்கும் உச்ச பீடமாகவும், நாடாளுமன்ற அங்கத்தினர்கள் இதர விஷயங்கள் குறித்து ஆலோசிக்கும் மையமாகவும் திகழ்கிறது.
எப்படி உள்ளே செல்வது
பார்வையாளர்கள் பாராளுமன்ற மாளிகைக்குள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும் முறைப்படி முன்அனுமதி பெற்று பாராளுமன்ற மாளிகைக்கு உள்ளே சென்று அவை நடவடிக்கைகளை பார்க்க சட்டப்படி குடிமக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இதற்கான பிரத்யேக நடைமுறைகளை விசாரித்து தெரிந்துகொண்டு பின்பற்றவேண்டும்.
செல்லும் வழிமுறைகள்
முதலில் நீங்கள் அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும்.
பாராளுமன்ற அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அதன் அலுவலகத்துக்குள் சென்று உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் அல்லது அங்கு கேட்கப்படும் சில அடையாள அட்டைகளை காண்பித்தால் போதுமானது.
பரிந்துரை
அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை இருந்தால் மிகவும் சுலபமாக உள் நுழைய முடியும். ஆனால் அதே நேரம் உங்கள் அடையாள அட்டை மிகவும் முக்கியம்.
உங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல..அதற்கு சில நாட்கள் வரை காத்திருக்க வேண்டி வரும்.
உங்கள் தொகுதி எம்பி உங்களின் நன்னடத்தையை உள்ளூர் காவல்நிலையம் மூலமாக தெரிந்துகொண்டு பின்னர்தான் பரிந்துரை செய்வார்.
சுற்றிப்பார்க்கும் நேரம்
பாராளுமன்ற முகப்பு மண்டபத்தைச் சுற்றி பார்க்க 1 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பிறகு நீங்கள் நிச்சயமாக வெளியேறிவிடவேண்டும்.
கடுமையான கட்டுப்பாடு
உங்களுடன் நீங்கள் எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் பாராளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வளவு ஏன் பென், தாள் கூட கூடாது.
நீங்கள் அங்கு குழந்தைத் தனமான செயல்களில் ஈடுபட்டால் கூட வெளியேற்றப்படுவீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அனுமதிச் சீட்டுக்களின் நிறம்
மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளுக்கும் தனித்தனி நிறங்களில் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.
மாநிலங்களவைக்கு செல்ல உதவும் அனுமதிச் சீட்டு மெரூன் நிறத்திலும், மக்களவைச் சீட்டு பச்சை நிறத்திலும் இருக்கும்.
இன்னும் சில விசயங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அவை இந்திய அரசின் வலைத் தளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவேளை நீங்கள் பாராளுமன்றத்துக்குள் செல்லவிரும்பினால் அதனை படித்து தெளிவு பெறுங்கள்.