அகரசேன் கி பாவ்லி டெல்லியிலுள்ள தனித்தன்மையான ஒரு சுவாரசிய கலைச்சின்னமாக வீற்றுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் உயர்ந்தோங்கி நிற்கும் நவீன கட்டமைப்புகள் மற்றும் இதர பளபளப்புகள் காரணமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் இந்த பழமையான கலைச்சின்னம் இருப்பதே பலருக்கு தெரியாது என்பதுதான் உண்மை.
அகரசேன் கி பாவ்லி இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் ஒரு வரலாற்றுச்சின்னமாகும். கன்னாட் பிளேஸ் எனும் இடத்துக்கு அருகில் ஹெய்லி ரோடில் இது அமைந்துள்ளது.
15 அடி அகலம் மற்றும் 60 அடி நீளத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு படிக்கிணறுதான் இந்த அகரசேன் கி பாவ்லி எனப்படும் அமைப்பு. இதைக்கட்டியது யார் என்பது குறித்த தீர்க்கமான சான்றுகள் எதுவும் இல்லை.
இருப்பினும் புராணிகக்கதைகளின்படி, இது மஹாபாரதத்தில் இடம் பெற்ற அக்ரசேனா எனும் மன்னரால் கட்டப்பட்டதாகவும் பிற்காலத்தில் அகர்வால் சமூகத்தினர்14ம் நூற்றாண்டில் இதனை புதுப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.
103 படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கிணறு 5 அடுக்குகளைக்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக வட்ட வடிவில் அமைக்கப்படும் படிக்கிணறு அமைப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக செவ்வக வடிவமைப்பின் ஒரு முனையில் மண்டபக்கூரையுடனும் மறுமுனையில் ஒரு பெரிய வேப்ப மரத்தின் நிழலின் கீழ் அமைந்திருக்கும் திறந்த வாசலுடனும் இது காணப்படுகிறது.
தற்போது இந்த கிணற்றில் நீர் இல்லை என்றாலும் இதன் கட்டமைப்பு பார்வையாளர்களை வெகுவாக வசீகரிக்கிறது. புறாக்கள் மற்றும் வௌவால்களும் அதிகமாக இந்த கிணற்றில் வசிக்கின்றன.
1958ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஸ்தலங்கள் பாதுகாப்பு சட்டப்பிரிவின்படி இந்த அகரசேன் கி பாவ்லி ஸ்தலம் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.