கழிவறைகளுக்காக ஒரு அருங்காட்சியகமா? என்று பலருக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கக்கூடும். ஆனால், மனித இருப்பிடங்களில் முக்கியமான அங்கம் வகிக்கும் கழிவறைகளின் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் குறித்த ஒரு அருங்காட்சியகம் டெல்லியில் உள்ளது.
இது சுலப் இண்டர்நேஷனல் எனும் ஸ்தாபனத்தால் துவங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் நிறுவன அமைப்புகள் மத்தியில் கழிவறை சுகாதாரம் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி, வடிவமைப்பு அத்தியாவசியங்கள் போன்ற கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம் துவங்கப்பட்டுள்ளது.
மனித நாகரத்தின் வளர்ச்சியில் காலத்துக்கேற்ப கழிவறை அமைப்புகள் எப்படியெல்லாம் மாறுபாடுகள் செய்யப்பட்டு முன்னேற்றம் கண்டன என்பது பற்றிய காட்சி விவரணங்கள் மற்றும் மாதிரி அமைப்புகள் காலக்கிரமப்படி இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
வெளிஅறை அமைப்புகள், கழிவுக்கலன்கள், கழிவறை இருக்கைகள், கழுவுகலங்கள் மற்றும் நீர்க்குழாய் அமைப்புகள் போன்றவற்றை இங்கு காணலாம். கற்காலத்தில் தொடங்கி நவின காலம் வரை கழிவறைகள் தொடர்பான நடைமுறைகள் மற்றும் கட்டமைப்பு நுட்பங்களை தெரிந்துகொள்ள இவை உதவுகின்றன.
டாக்டர் பிந்தேஷ்வர் பதக் எனும் சமூக உணர்விருப்பாளரால் இந்த அற்புதமான அவசியமான அருங்காட்சியகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மனிதக்கழிவறைகளின் அமைப்பு, வளர்ச்சி, சுகாதார அவசியம் போன்ற அம்சங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த காட்சிக்கூடத்தை அவர் உருவாக்கியிருந்தாலும், அனைவருக்குமே பயனளிக்ககூடிய காட்சிக்கூடமாக இது விளங்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த தனித்தன்மையான அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.