பய்யம்பலம் கடற்கரையின் தொடர்ச்சியான இந்த மீன்குண்ணு பீச் கண்ணூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள ஆழிக்கொடே எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. மீன்மலை எனும் பொருளை தரும்விதத்தில் இந்த கடற்கரைக்கு மீன்குண்ணு என்று பெயரிடப்பட்டுள்ளது. (குண்ணு=மலை)
நீண்ட வெண்மணற்பரப்பையும் ஓரத்தில் தென்னை மரங்களின் அணிவகுப்பையும் கொண்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரை தன் இயற்கை வனப்பிற்காகவே இயற்கை ரசிகர்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது. அதிகம் சுற்றுலாப்பயணிகளால் அறியப்படாததால் இதன் மாசுபடா நிசப்தமும் எழிலும் கண்களையும் மனதையும் கவரும் விதத்தில் காட்சியளிக்கிறது.
ஏகாந்தமான இயற்கை எழிற்பிரதேசத்தில் கொஞ்சம் தனிமை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கடற்கரைப்பகுதி மிகவும் ஏற்ற இடமாகும். மணற்பரப்பில் நடந்தபடியே சூரியக்கதிர்களில் நனைவது ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபமாக இருக்கும்.
சுத்தம் மற்றும் பாதுகாப்பான சூழலைக்கொண்டுள்ளதால் குடும்பத்துடனும், ஜோடியாகவும் ஆனந்தமாக பொழுது போக்குவதற்கு ஏற்ற இந்த கடற்கரைக்கு பகலில் எந்த நேரத்திலும் விஜயம் செய்து மகிழலாம்.