அகுவாடா கோட்டை, 17-ஆம் நூற்றாண்டுகளில் டச் மற்றும் மராட்டியர்களின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை, கலங்கரை விளக்கத்துடன் சேர்த்து அகுவாடா கடற்கரையில், அரபிக் கடலின் பின்னணியில் பார்க்கும் எவருமே சொக்கிப் போவது நிச்சயம். அதோடு இந்தப் பகுதியில் உள்ள தாஜ் விவண்டா என்ற 5 நட்சத்திர ஹோட்டல் அதன் பிரத்தியேக உணவுப் பட்டியல் காரணமாக பயணிகளிடையே மிகப்பிரபலம்.
அகுவாடா பீச்சும் சரி, அகுவாடா கோட்டையும் சரி, கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்தில்தான் அமைந்திருக்கின்றன. அகுவாடா கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் மாலை நேரம் வந்துவிட்டால் ஏராளமான செகண்ட் ஹெண்ட் மார்கெட்டுகள் புதிதாக முளைக்கத் துவங்கி விடும். இந்த கடைகளில் நீங்கள் பாரம்பரிய ஆடைகள் மற்றும் சில பொருட்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கிச் செல்லலாம்.
மேலும், கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் அகுவாடா கோட்டையை சுலபமாக அடைந்து விடலாம். எனவே கோவா விமானம் மற்றும் ரயில் நிலையங்களை அடையும் பயணிகள், கார்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அகுவாடா கோட்டைக்கு பயணிக்கலாம். அப்படி நீங்கள் அகுவாடா கோட்டைக்கு செல்லும் வழிகளில் வைக்கப்பட்டிருக்கும் அகலமான அறிவிப்புப் பலகைகள் உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications