அஷ்டவிநாயக் எனும் பெயரிலேயே எட்டு கணபதிகள் எனும் பொருள் அடங்கியுள்ளது. இருப்பினும் அஷ்டவிநாயக் என்பது மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள எட்டு முக்கியமான விநாயக்கோயில்களுக்கு மேற்கொள்ளும் புனிதயாத்திரையை குறிப்பிடுவதாகும். இந்த எட்டு விநாயகக் கடவுளின் கோயில்களின் பெயர்களும் அவை அமைந்திருக்கும் இடங்களும் பின்வருமாறு: மயூரேஷ்வர் – மோர்காவ்ன், சித்திவிநாயக் – சித்ததேக், பல்லாலேஷ்வர் – பாலி, கிரிஜாத்மக் – லென்யாத்ரி, சிந்தாமணி – தேவூர், விக்னேஷ்வர் – ஒஸார், மஹாகணபதி – ரஞ்சன்காவ்ன் மற்றும் வரத்விநாயக் – மஹாத்.
இந்த எட்டு விநாயகர் கோயில்களும் மிகப்பழமையானதும் புராதனமானதுமான கோயில்களாகும். ஹிந்து மதத்தின் கணேச மற்றும் முத்கல புராணங்களில் இந்த எல்லா கோயில்களையும் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
மிக அழகான கட்டிடக்கலை அம்சங்கள் இடம் பெற்றுள்ள இந்தக் கோயில்கள் யாவுமே பல்வேறு காலகட்டங்களில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தீவிர கணபதி பக்தர்களான பேஷ்வாக்களின் ஆட்சியின்போது நிறைய புனரமைப்புகள் இந்த கோயில்களில் செய்யப்பட்டுள்ளன.
இந்துக்கள் யாவரும் இந்த எட்டு முக்கியமான விநாயக்கடவுள் கோயில்களை தரிசிப்பது அதிர்ஷ்டத்தையும் மனத்தெளிவையும் கொடுக்கக்கூடிய விசேஷமான ஆன்மீக தரிசனமாக கருதப்படுகிறது.
இந்த எட்டு விநாயக்கோயில்கள் சம்பந்தப்பட்ட மற்றொரு விசேஷமான தகவல் இவை யாவுமே சுயம்புவாக உருவான கோயில்கள் என்பதாகும். அதாவது இந்த கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் மனிதரால் உருவாக்கப்பட்டிராமல் தாமாகவே அந்தந்த ஸ்தலங்களில் உருவானவை என்பது ஐதீகம்.
எட்டு கோயில்களுக்கான ஆன்மீக யாத்திரை
இந்த எட்டு கோயில்களிலும் விநாயகக்கடவுளின் ஒவ்வொரு ரூபங்கள் காட்சியளிக்கின்றன. மேலும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு விசேஷ நன்மையை அருளும் சக்தி கொண்டவராக பக்தர்களால் நம்பப்படுகின்றார்.
தடை நீக்குவதிலிருந்து செல்வத்தையும் அருளையும் வழங்குவது வரை பலவிதமான அருளை விநாயகக்கடவுள் இந்த எட்டு ரூபங்களின் மூலம் பக்தர்களுக்கு வழங்குகின்றார். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விதமாக கட்டப்பட்டிருந்த போதிலும் யாவற்றிலுமே ஒரு உள்ளார்ந்த ஒற்றுமை காணப்படுகிறது.
துதிக்கையும் அது அமைந்திருக்கும் இடமும் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. இருப்பினும் சித்ததேக்கில் உள்ள சித்திவிநாயக் கோயிலை தவிர்த்து எல்லாக் கோயில்களிலும் துதிக்கை இடதுபுறம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சித்ததேக் கோயிலில் மட்டும் வலது புறம் காணப்படுகிறது.
மயூரேஷ்வர் கோயில் மோர்காவ்ன் கிராமத்தில் உள்ளது. இந்தக்கோயிலில் 50 அடி உயர கும்பவடிவ கோபுரமும் அதைச்சுற்றி நான்கு தூண்களும் அமைந்துள்ளது. அருகிலேயே பிரமாண்டமான தீபமாலாவும் அமைந்துள்ளது. வரிசையாக பல விளக்குகள் அமைந்துள்ள - கல்லால் உருவாக்கப்பட்டுள்ள தூண் வடிவம் இது.
சித்திவிநாயக் கோயில் சித்ததேக் பகுதியில் உள்ளது. இங்குள்ள பிரதக்ஷணப்பாதை பிரசித்தியாக அறியப்பட்டுள்ளது. இந்தக்கோயில் மலைப்பகுதியில் அமைந்திருப்பதால் கோயிலை பிரத்க்ஷணப்பாதை வழியாக சுற்றிவருவதற்கு 5 கி.மீ தூரத்தை கடக்கவேண்டியுள்ளது.
பாலி எனும் கிராமத்தில் பல்லாலேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. எட்டு விநாயகக் கோயில்களிலேயே இந்தக்கோயில் மட்டும் விசேஷமாக – பிராம்மண வடிவில் வந்த ஒரு பக்தரின் பெயரில் அழைக்கப்படுகிறது.
கிரிஜாத்மக் கோயில் ஒரு மலையின் உச்சியில் உள்ள குகைகளில் ஒன்றில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு 300 படிகளை ஏற வேண்டியிருக்கும் என்றாலும் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளின் ரம்மியம் அந்த சிரமத்தை மறக்க வைத்து விடும்.
தேவூரிலுள்ள சிந்தாமணி கோயிலில் விநாயகக்கடவுள் சிந்தாமணி அவதாரம் எடுத்து பிரம்மாவின் கவலைகளை தீர்த்தவராக அறியப்படுகிறார்.
ஒஸாரில் உள்ள விக்னேஷ்வர் கோயிலில் வேறெங்கும் இல்லாத விசேஷமாக அழகான கும்ப வடிவ கோபுரமும் அதன் உச்சியில் தங்கக்கலசமும் காணப்படுகிறது.
மஹாகணபதிகோயில் கிழக்குப்பக்கம் நோக்கியதாக அழகான வாயிலுடன் காணப்படுகிறது. ஜய் மற்றும் விஜய் எனும் இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளும் வாயிலில் அமைந்துள்ளன. மஹாகணபதி கோயில் ரஞ்சன்காவ்ன் பகுதியில் உள்ளது.
கடைசியாக உள்ள கோயிலான வரத் விநாயக் கோயில் மஹாத் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள விநாயகர் விக்கிரகம் ஏரிக்கருகில் கண்டறியப்பட்டு பின்னர் இந்த கோயிலினுள் வைக்கப்பட்டது. இப்போது நாம் காணும் வரத் விநாயக் கோயில் பேஷ்வா மன்னர்களால் புத்துருவாக்கம் செய்யப்பட்டதாகும்.
எப்போது புனிதயாத்திரையை மேற்கொள்ளலாம்?
பல சுற்றுலாப்பேருந்து நிறுவனங்கள் இந்த எட்டு விநாயக கோயில்களுக்குமான ஒருங்கிணைந்த சுற்றுலாவை மூன்று நாட்கள் கொண்டதாக ஏற்பாடு செய்து வழங்குகின்றன.
அருகிலுள்ள தனியார் சுற்றுலா நிறுவனத்தை அணுகி இந்த மூன்று நாள் புனித் யாத்திரைச்சுற்றுலாவுக்கு நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். தனியாக அல்லது குடும்பத்துடனோ உங்கள் சௌகரியப்படி இந்த யாத்திரைச்சுற்றுலாவை நீங்கள் மேற்கொள்ளலாம்.
இந்த எட்டு கணபதி கோயில்களும் ஒரு அற்புதமான தெய்வீக சக்தியை கொண்டிருப்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. எட்டு ஸ்தலங்களை உள்ளடக்கிய யாத்ரீக பயணம் சோர்வூட்டும்படியாக தோன்றினாலும் உங்களுக்கு மஹா சக்தியான கடவுள் சக்தியின் மீது நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இந்த யாத்திரை அமையும்.
பல்வேறு மதங்களில் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டாலும் ஒரு முழுமுதற்கடவுளின் மீதான நம்பிக்கையும் அதன்வழி மனநிறைவும் இந்த பயணத்தின் மூலம் உங்களுக்கு கிட்டும்.
புனே மாவட்டத்திலுள்ள ஆறு கோயில்கள் மற்றும் ராய்கட் மாவட்டத்திலுள்ள இரண்டு கோயில்களை பார்க்க மஹாராஷ்டிர மாநிலத்தில் பரந்த அளவில் பயணம் செய்யவேண்டியிருப்பது ஒரு மலைப்பூட்டும் விஷயமாக தோன்றலாம்.
ஆனால் இந்த யாத்திரையின் இறுதியில் வாய்க்கும் ஆன்மீக பலமும் மனத்தெளிவும் பயணச்சிரமங்களை எல்லாம் மறக்கடிக்ககூடிய சக்தி கொண்டதாகும்.