பிகானேர் நகரத்தின் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ஜுனாகர் கோட்டை பிரசித்தி பெற்றுள்ளது. எளிதில் சென்றடைய முடியாத இந்த கோட்டை ராஜா ராய் சிங் என்பவரால் 1593ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
அகழியால் சூழப்பட்டுள்ள இந்த கோட்டைக்குள் அனுப் மஹால், கங்கா நிவாஸ், ரங் மஹால், சந்திர மஹால், ஃப்பூல் மஹால், கரண் மஹால் மற்றும் ஷீஷ் மஹால் போன அழகிய அரண்மனைகள் அமைந்துள்ளன.
அனுப் மஹால் எனும் அரண்மனையில் மெய்சிலிர்க்க வைக்கும் தங்க இலை ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சந்திர மஹால் அரண்மனையில் சுண்ணாம்புச்சுவரில் வரையப்பட்டுள்ள அற்புதமான ஓவியங்கள் காணப்படுகின்றன.
ஃப்பூல் மஹால் அரண்மனையில் கண்ணாடி வேலைப்பாடுகள் பொதிக்கப்பட்ட அலங்காரங்களைக் காணலாம். கரண் மஹால் அரண்மனையானது பிக்கானேர் அரசர்கள் முகலாய அரசரான ஔரங்கசீப்பை வெற்றிகொண்டதன் அடையாளச்சின்னமாக கட்டப்பட்டுள்ளது.
துல்மேரா எனப்படும் சிவப்பு மணற்பாறைக்கற்களை பயன்படுத்தி இந்த அரண்மனைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த கோட்டை 986 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவரையும், 37 காவல் கோபுரங்களையும் இரண்டு நுழைவாயில்களையும் கொண்டுள்ளது. கரண் போல் எனப்படும் பிரதான வாயில் வழியாக சுற்றுலாப்பயணிகள் இந்த கோட்டைக்குள் நுழையலாம்.
ஹர் மந்திர் எனப்படும் கம்பீரமான கோயிலும் இந்த கோட்டைக்குள் உள்ளது. இக்கோயிலில் பிகானேர் ராஜகுடும்பத்தினர் வழிபாடு புரிந்துள்ளனர். தர்பார் ஹால், கஜ் மந்திர் மற்றும் சூரஜ் போல் ஆகியவை இக்கோட்டையிலுள்ள இதர விசேஷமான அம்சங்களாகும்.