ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகருக்கு மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய பாலைவன கிராமம் கீச்சன். இந்த கிராமத்தை தேடி உலகம் முழுவதுமிருந்து ஒவ்வொரு பனிக் காலத்திலும் வரும் புலம்பெயர் இளநாரைகளை பார்பதற்காக இங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பறவைகளின் புகலிடம்
சில வருடங்களுக்கு முன்பு பறவைகளை நேசிக்கும் மார்வாடி இனத்தை சேர்ந்த ஒருவரும், ஒரு சில கிராம மக்களும் சேர்ந்து கீச்சன் கிராமத்துக்கு வரும் பறவைகளுக்கு தானியங்களை ஊட்ட துவங்கினர்.
இதன் காரணமாக குர்ஜா என்று அழைக்கப்படும் இளநாரைகளின் கூட்டம் இங்கு பெருக தொடங்கியது. அன்றிலிருந்து தொடர்ந்து கீச்சன் கிராம மக்கள் இந்தப் பறவைகளுக்கு உணவளித்து வருகின்றனர். இன்றளவில் 5000 கிலோ தானியங்கள் இந்த நாரைகளுக்கு உணவாக தினந்தோறும் அளிக்கப்பட்டு வருகின்றன.
'பேர்டிங் வேர்ல்ட்' என்ற புகழ்பெற்ற பத்திரிக்கையில் கீச்சனை பற்றி 'கீச்சன் - இள நாரைகளின் கிராமம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமானதிலிருந்து இந்த கிராமம் சர்வதேச அங்கீகாரத்தை பெறத் துவங்கியது.
கீச்சன் கிராமத்தில் செயல்பட்டு வரும் குர்ஜா சம்ரக்ஷன் விகாஸ் சன்ஸ்தான் மற்றும் பக்ஷி சுகா கர் என்ற அமைப்புகள் புலம்பெயர்ந்து வரும் இவ்வகை நாரைகளை பராமரிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் கிராம மக்களிடமிருந்தும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்தும் நன்கொடைகள் வாங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மார்வாடி நாரைகள் அறக்கட்டளை என்ற அமைப்பும் இந்த பறவைகளை பாதுகாக்கும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ளது.
கீச்சன் கிராமம் தற்போது சுற்றுலா ஸ்தலமாக ராஜஸ்தான் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நாரைகள் அறக்கட்டளையின் இயக்குனர் இந்த கிராமத்துக்கு அடிக்கடி வந்து பறவைகளை பார்வையிட்டுச் செல்கிறார்.
கீச்சனை எப்படி அடைவது?
கிச்சன் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் விமான நிலையமும், 4.5 கிலோமீட்டர் தூரத்தில் பலோடி ரயில் நிலையமும் அமைந்திருக்கின்றன. அதேபோல இந்த கிராமத்தை சாலை மூலமாகவும் சுலபமாக அடையலாம்.