தேஷ்நோக் எனும் அழகிய குக்கிராமம் ராஜஸ்தான் மாநிலத்தின் 'ஒட்டக தேசம்' என்று அழைக்கப்படும் பிக்கனேர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் முன்பு பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்ததால் பத்து மூலைகள் எனும் பொருள்படும்படி 'தஸ் நோக்' என்று அழைக்கப்பட்டது.
தேஷ்நோக் கிராமம் பாகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகிலேயே, பிக்கனேர் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் கர்ணி மாதா திருவிழா மற்றும் இதர விழாக்கள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
எலிகளை வழிபடும் வினோதம்!
தேஷ்நோக் கிராமத்தில் உள்ள கர்ணி மாதா கோயில் ஒரு விந்தையான புனித ஸ்தலமாகும். இந்தியாவில் வேறெங்கும் நீங்கள் கர்ணி மாதா கோயிலை போன்று எலிகளை வணங்கும் வினோத வழிபாட்டு முறையை காண முடியாது.
இதன் காரணமாகவே இந்தக் கோயில் எலிக் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான கர்ணி மாதா, துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. அதோடு பிக்கனேர் மகாராஜாக்கள் தங்கள் குலதெய்வமாக கர்ணி மாதாவையே வணங்கி வந்தனர்.
கர்ணி மாதா கோயில் 20-ஆம் நூற்றாண்டில் கங்கா சிங் மகாராஜாவால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கபாஸ் என்று அழைக்கப்படும் 20, 000-க்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.
இங்குள்ள எலிகள் அனைத்தும் கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து கொண்டு திரிவதாக தேஷ்நோக் கிராமத்தை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர். மேலும் இந்த எலிகள் புனிதமாக கருதப்படுவதால் பக்தர்கள் இந்த எலிகளிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்.
கர்ணி மாதா கோயிலில் காணப்படும் சலவைக்கல் சிற்ப வேலைப்பாடுகள் கண்ணை கவரும் விதத்தில் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச்-ஏப்ரல் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் ஆகிய இரு தருணங்களில் நடைபெறும் கர்ணி மாதா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மேலும் கங்காவ்ர் எனும் திருவிழாவும் இந்த கிராமத்தில் விமரிசையாக கொண்டாப்படும் திருவிழாவாகும். இத்திருவிழா கௌரி மாதாவுக்காக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பெண்களால் நடத்தப்படுகிறது.
தேஷ்நோக்கை எப்படி அடைவது?
தேஷ்நோக் கிராமத்திற்கு அருகில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையமாக ஜோத்பூரும், வெளிநாட்டு விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையமும் அறியப்படுகின்றன.
இதில் டெல்லி விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா, சென்னை, பெங்களுர், மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் ஜோத்பூர் நகரில் உள்ள ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ரயில் நிலையம் ஜெய்ப்பூர், சுரு, ஜோத்பூர், டெல்லி, ஹௌரா போன்ற நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு ஆக்ரா, டெல்லி, அஜ்மீர், ஜோத்பூர், அஹமதாமாத், ஜெய்ப்பூர், கோட்டா உள்ளிட்ட நகரங்களிலிருந்து பிக்கனேர் நகருக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே பயணிகள் பிக்கனேர் நகருக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் வெகு சுலபமாக தேஷ்நோக் கிராமத்தை அடைந்து விடலாம்.
தேஷ்நோக் கிராமத்தின் வானிலை
தேஷ்நோக் கிராமத்தில் ஆண்டு முழுவதும் கடுமையான வெப்பநிலையே நிலவும். இந்த குக்கிராமத்துக்கு நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்க வருவதுதான் சிறந்த தேர்வாக இருக்கும்.