ராஜஸ்தானின் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாகௌர் நகரம் நாக சத்திரிய வம்சத்தினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது நாகௌர் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கி வருகிறது. இந்த நகரம் புகழ் பெற்ற சுற்றுலா நகரங்களான பிக்கானேருக்கும் ஜோத்பூருக்கும் இடையில் அமைந்துள்ளது.
வரலாற்று மற்றும் புராணிகப் பின்னணி
நாகௌர் நகரத்தின் வரலாற்றுப்பின்னணி மஹாபாரத காலம் வரை பின்னோக்கி நீள்கிறது. அதில் சொல்லப்படும் அஹிசாத்திரபூர் எனும் ராஜ்ஜியமானது தற்போதைய நாகௌர் மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
பாண்டவ மாவீரனான அர்ஜுனா இந்த அஹிசாத்திரபூர் ராஜ்ஜியத்தை வென்று தன் குருவான துரோணாச்சாரியாருக்கு காணிக்கையாக கொடுத்ததாக புராணிக நம்பிக்கை நிலவுகிறது.
நாகௌர் நகரத்தில் காண வேண்டிய அம்சங்கள்
இந்த நகரம் நாகௌர் கோட்டை எனும் மணற்கோட்டைக்கு புகழ் பெற்று விளங்குகிறது. 2ம் நூற்றாண்டில் நாகவன்ஷி வம்சத்தாரால் இந்தக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. அரண்மனைகள், நீரூற்றுகள், கோயில்கள் மற்றும் நந்தவனங்கள் என்று பல அம்சங்கள் இந்த கோட்டை வளாகத்தில் நிறைந்துள்ளன.
இந்த கோட்டையைத் தவிர நாகௌர் நகரத்தில் தர்கீன் தர்க்கா எனும் ஸ்தலமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. முஸ்லிம் ஆன்மீக யாத்ரீகர்களுக்கு இது முக்கியமான புனிதத்தலமாகும்.
நாகௌர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இங்குள்ள கமலா டவருக்கு பின்னால் அமைந்துள்ள ஜெயின் கண்ணாடிக்கோயிலுக்கு விஜயம் செய்வது அவசியம்.
அற்புதமான இந்த கோயிலின் கட்டுமானம் முழுக்கவும் கண்ணாடியால் ஆனதாகும். இதன் உட்புறம் கண்ணாடி வேலைப்பாடுகளும் அலங்கார அமைப்புகளும் நிறைந்திருப்பது ஒரு விசேஷமான கவர்ச்சி அம்சமாக அறியப்படுகிறது.
24 ஜைன தீர்த்தங்கரர்களின் அளவில் பெரியதான சிலைகளை இங்கு பக்தர்கள் தரிசிக்கலாம். இவை தவிர, சாய்ஜி கா டங்கா எனும் இடமும் நாகௌர் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது.
ஹாடி ராணி மஹால், தீபக் மஹால், அக்பரி மஹால் மற்றும் ராணி மஹால் போன்ற கம்பீரமான அரண்மனைகளும் நாகௌர் நகரத்தில் அமைந்துள்ளன. இவை அனைத்துமே அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்கும் உட்புற அலங்கரிப்பு வேலைப்பாடுகளுக்கும் புகழ் பெற்றுள்ளன.
மேலும், இங்கு அமர் சிங் ரத்தோர் நினைவு மாடம், பன்ஸிவாலா கோயில், நாத் ஜி கி சாத்ரி மற்றும் பார்லி போன்ற இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களையும் பயணிகள் பார்க்கலாம்.
பயண வசதிகள்
நாகௌர் நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். ஜோத்பூர் விமான நிலையம் நாகௌர் நகருக்கு அருகிலுள்ள விமானத்தளமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டுப்பயணிகள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இணைப்புச்சேவைகள் மூலமாக இங்கு வருகை தரலாம். தவிர இங்கிருந்து இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் தினசரி விமான சேவைகள் உள்ளன.
நாகௌர் நகர ரயில் நிலையம் ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிக்கானேர் மற்றும் டெல்லி போன்ற நகரங்களுடன் தினசரி சேவைகளைக் கொண்டுள்ளது. மேற்சொன்ன நகரங்களிலிருந்து பேருந்துச்சேவைகளும் உள்ளதால் சாலை மார்க்கமாகவும் எளிதில் நாகௌர் நகரத்தை அடையலாம்.
பருவநிலை
மிகக்குறைவான மழையை பெறுவதால் நாகௌர் பிரதேசமானது வெப்பமான வறண்ட பருவநிலையை பெற்றுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் போன்ற மூன்று முக்கியமான பருவங்களே இங்கு நிலவுகின்றன.
அக்டோபர் முதல் நவம்பர் வரையான இடைப்பட்ட பருவத்தில் இங்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது. இக்காலத்தில் இப்பகுதியின் பருவநிலையானது சற்றே இதமான சூழலுடன் காட்சியளிக்கிறது.