தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும் அதே சமயம் ராஜரீக அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற இந்த சுற்றுலாத்தலம் புவியியல் ரீதியாக பிரசித்தி பெற்ற தார் பாலைவனத்தின் மையத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். ஒரு புறம் பாகிஸ்தானுடனும் மற்ற திசைகளில் பிக்கானேர், பார்மேர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களுடனும் தன் எல்லையை ஜெய்சல்மேர் மாவட்டம் பகிர்ந்து கொள்கிறது.
ராஜஸ்தான் மாநில தலைநகரமான ஜெய்ப்பூரிலிருந்து 575 கி.மீ தொலைவில் இந்த தங்க நகரம் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் மாவட்டத்தின் பிரதான பொருளாதார அடிப்படையாக சுற்றுலாத்தொழில் இயங்குகிறது. 12ம் நூற்றாண்டில் இந்நகரை உருவாக்கிய ‘ராவ் ஜெய்சல்’ என்ற மன்னரின் நினைவாக இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தங்க நகரம் ராஜஸ்தானிய நாட்டார்கலை இசை வடிவத்துக்கும், நடன வடிவங்களுக்கும் சர்வதேச அளவில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பாலைவனத் திருவிழாக் காலத்தின் போது சாம் மணற்குன்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தினரால் ‘கல்பெலியா’ எனப்படும் சிருங்கார நடனம் நிகழ்த்தப்படுகிறது.
இந்த பாலைவனத் திருவிழா பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ஒட்டகப் பந்தயங்கள், தலைப்பாகை அலங்கார நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்களின் ‘மீசை’ குறித்த போட்டிகள் என்று பலவிதமான அம்சங்கள் பல திசைகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன.
அவைதவிர, கூடார வாசம், இரவில் சொக்கப்பனை வெளிச்ச கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் ஒட்டகச்சவாரி போன்றவையும் ஜெய்சல்மேருக்கு வருகை தரும் பயணிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை அளிக்கின்றன.
நாவில் நீர் சுரக்க வைக்கும் உணவு வகைகள்
இந்த தங்க நகரத்தில் விடுமுறையை உல்லாசமாக கழிக்க வரும் பயணிகள் ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்து மகிழலாம். முர்க்-இ-சப்ஸ் எனப்படும் எச்சில் ஊற வைக்கும் உணவு வகை இங்கு பயணிகளால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாகும். இது எலும்புகளற்ற கோழி இறைச்சியை காய்கறித்துண்டங்களுடன் வதக்கி தயார் செய்யப்படும் ஒரு விசேஷ உணவாகும்.
பாலைவன மொச்சை மற்றும் வால்மிளகு இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் ‘கேர் ஷாங்க்ரி’ எனும் பதார்த்தமும் ஜய்சல்மேரில் விசேஷமாக கிடைக்கிறது. உருளைக்கிழங்கை புதினா துவையலுடன் சேர்த்து குழம்பில் காய்ச்சி தயாரிக்கப்படும் ‘பனான் ஆலு’ எனப்படும் உணவு வகையையும், மாவு உருண்டைகளை பாலாடையில் போட்டு சமைத்த ‘காடி பகோரா’ வையும் ஆர்வமுள்ள பயணிகள் ருசித்துப் பார்க்கலாம். மேற்குறிப்பிட எல்லா உணவு வகைகளுமே ஜெய்சல்மேரில் உள்ள உணவகங்களில் கிடைக்கின்றன.
சுற்றிப்பார்த்து ரசிக்கமட்டுமல்ல…
ராஜஸ்தானில் உள்ள எல்லா பாலைவன நகரங்களையும் போலவே ஜெய்சல்மேர் நகரமும் இங்குள்ள ராஜகம்பீர கோட்டைகள், கோட்டை மாளிகைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கோயில்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது.
ஜெய்சல்மேரின் பெருமைக்குரிய சின்னமாக கருதப்படும் ஜெய்சல்மேர் கோட்டை இந்த தங்க நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். சூரியன் மறையும் அந்தி நேரத்தில் இந்த மஞ்சள் நிற மணற்பாறைகளால் ஆன கோட்டை தங்க நிறத்தில் ஜொலிக்கின்றது.
அதனாலேயே இது தங்க கோட்டை அல்லது சோனார் குய்லா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கோட்டைக்கு அக்காய் போல், ஹவா போல், சூரஜ் போல் மற்றும் கணேஷ் போல் என்ற வாசல்கள் உள்ளன.
ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலையை இணைத்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்த கோட்டையில் பல அரசகுடும்ப அரண்மனைகளையும், ஏழு ஜெயின் கோயில்களையும் மற்றும் எண்ணற்ற கிணறுகளையும் காணலாம். ஏழு ஜெயின் கோயில்களில் ஷாந்திநாத் கோயில், சந்திரபிரபு கோயில் மற்றும் ஷீதல்நாத் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மஹாராஜா அரண்மனை அல்லது ஜெய்சல்மேர் கோட்டை அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் பண்பாட்டு மையம் போன்றவை ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
இந்த அரண்மனை உச்சியிலிருந்து ஜெய்சல்மேர் நகரக்காட்சிகளை பயணிகள் கண்டு ரசிக்க முடியும். வெள்ளி அரியாசனம், அரச கட்டில், பாத்திரங்கள், முத்திரைகள், பணம் மற்றும் ராஜ குடும்பத்தினரின் சிலைகள் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த அரண்மனையில் பயணிகள் பார்ப்பதற்கென்று உள்ளன.
180 வருடங்கள் பழமையை உடைய ‘அகால் மரப்படிவ பூங்கா’வும் ஜெய்சல்மேரில் பார்க்க வேண்டிய பிரசித்தமான இடமாகும். தொல் படிவங்களாக காட்சியளிக்கும் பிரம்மாண்டமான மர அடிவாரத்துண்டுகளும், புராதனமான கடற் சங்குகளும் இந்த பூங்காவில் காணப்படும் முக்கியமான விசேஷ அம்சங்களாகும்.
பூனைப்பருந்து, பருந்து, புள்ளிக்கழுகு, ஆளிப்பருந்து, கழுகு, சிவப்பு வல்லூறு, புள்ளி வல்லூறு மற்றும் மணற் கௌதாரி போன்ற அதிசயமான பறவை வகைகள் ஜெய்சல்மேரிலுள்ள பாலைவன தேசிய பூங்காவில் காணப்படுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தின் அரிய வகைப்பறவையான கான மயில் அல்லது காட்டு மயில் என்றழைக்கப்படும் பறவை இனம் இந்த தேசியப்பூங்காவை உறைவிடமாக கொண்டிருப்பது விசேஷமான ஒன்றாகும். நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் இந்த தேசிய பூங்காவுக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும்.
நத்மல்ஜி-கி-ஹவேலி, சலீம் சிங் – கி –ஹவேலி, பட்வோன்-கி-ஹவேலி, ஹவேலி ஷீநாத், மனக் சௌக் போன்ற ஹவேலிகள் (கோட்டை மாளிகைகள்) அவற்றின் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுக்காக புகழ்பெற்று அறியப்படுகின்றன.
மேலும் ஜெய்சல்மேருக்கு வருகை தரும் பயணிகள் மூல் சாகர், கோபா சௌக், ஜெய்சல்மேர் நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகம், டாசியா டவர், காட்ஸிசார் ஏரி, படா பாக், கூரி சந்த் மணற் குன்றுகள், சாம் மணற் குன்றுகள் மற்றும் குல் தாரா போன்ற இடங்களை தவறாமல் பார்த்து மகிழலாம்.
ஜெய்சல்மேரில் அமர் சிங் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள அமர் சிங் அரண்மனை ஒரு அழகான ராஜ மாளிகை ஆகும். இந்த அரண்மனை 17ம் நூற்றாண்டில் ராஜா மஹரவால் அகாய் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் உட்புறத்தை அற்புதமான சுவரோவியங்கள் அலங்கரிக்கின்றன.
இப்படிப்பட்ட அழகான அரண்மனைகளுடன் சில அருங்காட்சியகங்களும் ஜெய்சல்மேரில் அமைந்துள்ளன. இங்குள்ள பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகத்தில் பல அரிதான வரலாற்று சாதனங்கள், அரிய தொல்படிவங்கள், புராதன பிரதிகள், புராதன நாணயங்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று கால வீட்டு உபயோகப்பொருட்கள், பாறைக்கற்களில் செய்யப்பட்ட குவளைகள், பாண்டங்கள் மற்றும் ஆபரணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜெய்சல்மேருக்கு செல்ல பயண வசதிகள்
விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும் விதத்தில் ஜெய்சல்மேர் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு அருகாமையில் உள்ள விமானத்தளமாக ஜோத்பூர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.
இது புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் பல விமான சேவைகளை கொண்டுள்ளது. தவிர இதர முக்கிய இந்தியப் பெருநகரங்களான கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து தினசரி விமான சேவைகள் ஜோத்பூர் விமான நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன.
ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்தே பிரிபெய்ட் டாக்சிகள் ஜய்சல்மேருக்கு கிடைக்கின்றன. பயணிகள் ரயில் மூலமாகவும் ஜெய்சல்மேரை வந்தடையலாம். ஜெய்சல்மேர் ரயில் நிலையத்தை ஜோத்பூர் மற்றும் முக்கிய இந்திய நகரங்களுடன் இணைக்கும் ரயில் சேவைகள் தினசரி உள்ளன.
இவை தவிர டெல்லி, ஜெய்ப்பூர், அஜ்மேர், பிக்கானேர் போன்ற நகரங்களிலிருந்து டீலக்ஸ் மற்றும் செமிடீலக்ஸ் பேருந்து வசதிகள் ஜெய்சல்மேர் நகருக்கு இயக்கப்படுகின்றன.
தங்க நகரமான ஜெய்சல்மேர் வருடமுழுவதும் வறண்ட வெப்பமான பருவ நிலையைக் கொண்டுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவையே இங்கு முக்கியமான பருவ காலங்களாகும். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் இங்கு விஜயம் செய்ய மிகவும் ஏற்ற காலமாகும்.