போரி வனவிலங்கு சரணாலயம் நாட்டின் பழமையான வனவிலங்கு சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள சத்புரா மலையின் அடிவாரத்தில் உள்ளது.
1865 ம் ஆண்டு இந்த வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இது சுமார் 518 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. அழகும் கம்பீரமும் உள்ள சத்புரா தேசிய பூங்கா இதன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ளது.
மேற்கு பகுதியில் டாவா ஆறு ஓடுகிறது. இத்தகைய அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த போரி வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன.
இந்த சரணாலயத்தில் உலர் இலையுதிர் மற்றும் மூங்கில் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை, சாம்பார், சின்காரா, குரைக்கும் மான், பெரிய அணில், கோடிட்ட கழுதை புலி, குள்ளநரி, நீல்காய், நான்கு கொம்பு மான் போன்ற பல விலங்கினங்கள் காணப்படுகின்றன.
புலிகள் இந்த சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சபாரிக்கள் நடத்தப்படுகின்றன. இங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக காட்டு பங்களாக்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன.