சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூரிலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சித்ரதாரா நீர்வீழ்ச்சி சித்ரகூட் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியிலேயே அமைந்திருக்கிறது. மிகச்சிறந்த இயற்கைக்காட்சிகள் நிறைந்த ஒரு வாரவிடுமுறை பொழுதுபோக்கு ஸ்தலமாக இது சத்திஸ்ஹர் மாநிலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது.
பஸ்தார் மாவட்டத்திலேயே இது போன்ற அழகு ஸ்தலம் வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரம்மியமான இயற்கை காட்சிகள் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்தில் நிரம்பியுள்ளன.
பொத்தனர் எனும் சிறிய அமைதியான கிராமத்துக்கு அருகே இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. சத்திஸ்ஹர் மாநிலத்திலிருந்து மட்டுமல்லாமல் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உல்லாசமாக பொழுதுபோக்குவதற்கு ஏற்ற ஒரு சிறந்த பிக்னிக் ஸ்தலமாக இது திகழ்கிறது. பெரும் வேகத்தில் புரண்டு விழும் நீரின் பிரவாகத்தை பிடித்தமானவர்களோடு பார்த்து ரசிக்கும் அனுபவத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது.
மழைக்காலத்தில் பேரிரைச்சலோடு நீரின் பிரவாகம் புரண்டு சரிந்து பாறையில் மோதி எழுப்பும் ஓசையையும், வெண்ணிறப்புகையுடன் மேலெழும்பும் நீரின் நுரைப்பையும் நேரில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
நீர்வீழ்ச்சியின் தரிசனம் ஏற்படுத்தும் பிரமிப்பிலிருந்து விடுபடவே சிறிது நாட்களாகலாம் என்பதுதான் உண்மை. நீர்வீழ்ச்சியை சூழ்ந்து காணப்படும் இயற்கைக்காட்சிகள் இன்னும் நமக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் காட்சியளிக்கின்றன.
தூய்மை கெடாத காட்டுப்பகுதி, அதன் நடுவே அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கம் போன்ற அம்சங்கள் யாவும் சேர்ந்து இந்த சித்ரதாரா நீர்வீழ்ச்சியை சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக அறிய வைத்துள்ளன. மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்வது சிறந்தது.