சித்ரகூட் அல்லது சித்ரகொடே என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி ‘இந்தியாவின் நயாகரா’ என்று வர்ணிக்கப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதை நீங்கள் நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
உலகப்பிரசித்தி பெற்ற நயாகராவை போன்றே பிரமாண்டமான நீர்ப்பரப்பானது பரந்து உயர்ந்த பாறை அமைப்புகளிலிருந்து அரை வட்ட வடிவில் காணப்படும் பள்ளத்தாக்கில் செங்குத்தாக சரிந்து புரளும் மஹா அற்புதக்காட்சிதான் இந்த சித்ரகொடே.
இந்தியாவின் மிக அகலமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக இது புகழ் பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகவும் இது சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது. பார்த்த முதல் கணமே உடலெங்கும் சிலிர்க்க வைக்கும் ‘இயற்கையின் விஸ்வரூப தரிசன’மாக இந்த நீர்வீழ்ச்சியை கூறலாம்.
அடர்ந்த காடுகளின் வழியே ஓடி வரும் இந்திரவதி ஆறுதான் இந்த ஸ்தலத்தில் 95 அடி உயரத்திலிருந்து மஹா பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியாக விழுந்து தரிசனம் அளிக்கிறது.
நீர் வீழ்ச்சியின் அகலமானது ஆற்றின் பிரவாகத்தை பொறுத்தே காணப்படும். எனவே மழைக்காலத்தில் மட்டுமே இந்த நீர்வீழ்ச்சியின் முழு பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் இரு கரையையும் தொட்டுக்கொண்டு முழு பிரவாகத்துடன் நீர்வீழ்ச்சி உயிர்பெறுகிறது. இருப்பினும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் இருக்கும் பட்சத்தில் நீர்வீழ்ச்சிக்கருகே பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
கோடைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியில் சிறு சிறு அருவிகளாக மட்டுமே ஆங்காங்கே விழுகிறது என்றாலும் இக்காலத்தில் நீர்வீழ்ச்சியின் விளிம்புகள் பாறை அமைப்புகள் போன்றவற்றை நன்கு பார்த்து ரசிக்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூரிலிருந்து 38 கி.மீ தூரத்தில் இந்த சித்ரகொடே நீர்வீழ்ச்சி ஸ்தலம் அமைந்திருக்கிறது. பயணிகள் சாலை மார்க்கமாக மட்டுமே இந்த நீர்வீழ்ச்சியை சென்றடைய முடியும்.
இந்தியாவில் இயற்கை ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த ‘சித்ரகொடே’ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.