ஜெய்ப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிட்டி பேலஸ் அரண்மனை ஒரு பிரபலமான பாரம்பரியச் சின்னமாகும். இது இந்நகரத்திலுள்ள கம்பீரமான மாளிகைகளில் ஒன்று.
ஜெய்ப்பூர் நகரின் ஸ்தாபகரான மஹாராஜா சவாய் ஜெய் சிங் மன்னரால் கட்டப்பட்டுள்ளது. ராஜபுதன மற்றும் முகலாய கட்டிடக்கலை அம்சங்களின் அற்புதமான கலவையாக இது காட்சியளிக்கிறது.
முபாரக் மஹால் என்றழைக்கப்படும் வரவேற்பு மண்டபம் இந்த அரண்மனையின் முகப்பில் அமைந்துள்ளது. இது 19ம் நூற்றாண்டில் மஹாராஜா சவாய் மதோ சிங் எனும் மன்னரால் கட்டப்பட்டு வரவேற்புக்கூடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்சமயம் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு மஹாராஜா இரண்டாம் சவாய் மான் சிங்’கிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராஜ அணிகலன்கள், பனாரஸ் பட்டு புடவைகள் மற்றும் பஷ்மினா சால்வைகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மஹாராஜா முதலாம் சவாய் மதோ சிங் (1750-1768) அணிந்திருந்த கனமான உடைகளை இங்கு காணலாம்.
சிட்டி பேலஸ் வளாகத்தில் மஹாராணி அரண்மனை எனும் மாளிகையில் வரலாற்றுகால ராஜபுதன ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தந்தப்பிடிகளுடன் கூடிய போர்வாட்கள், சங்கிலி கவச ஆடைகள், போர்த்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், பீரங்கிகள், விஷப்பூச்சு கொண்ட கத்திகள் மற்றும் வெடிமருந்துப்பைகள் போன்ற பிரமிக்க வைக்கும் சேகரிப்புகளை இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
கத்தரி போன்று இயங்கும் வாள்வடிவம் ஒன்று இங்குள்ள சேகரிப்புகளில் குறிப்பிடத்தக்க ஆயுதமாக பிரசித்தி பெற்றுள்ளது. 15 ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சேர்ந்த ஆயுதங்கள் சிலவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
சிட்டி பேலஸ் மியூசியம் காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை பயணிகளுக்கு திறந்து விடப்படுகிறது. நுழைவுக்கட்டணமாக இந்தியப்பயணிகளுக்கு 75 ரூபாயும் வெளிநாட்டினருக்கு 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.