பொசுக்கும் வெயில் இல்லாத அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட மாதங்களே காளஹஸ்திக்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் ஈரப்பதமும் குறைந்தே காணப்படுவது வெளியில் சுற்றிப்பார்க்க ஏதுவாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பலவித கோயில் திருவிழாக்களும் இந்த பருவத்தில் கொண்டாடப்படுவதால் பயணிகளும் பக்தர்களும் அவற்றில் பங்கேற்று மகிழ்வதற்கும் இந்த மாதங்கள் ஏற்றதாக உள்ளன.
எல்லா ஆந்திர நகரங்களையும் போலவே காளஹஸ்தி நகரமும் கோடைக்காலத்தில் மிகக்கடுமையான தாங்கிக்கொள்ளமுடியாத வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 42° C வரையில் காணப்படுகிறது. எனவே வெளியில் சுற்றுவது சாத்தியமல்லாத ஒன்றாகவே இருக்கும். பிப்ரவரி மாத பாதியில் துவங்கி மே மாதம் வரை இங்கு கோடைக்காலம் நிலவுகிறது.
ஜூன் மாத பாதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடியும் வரை காளஹஸ்தியில் மழைக்காலம் நீடிக்கின்றது. மழைக்காலத்தில் காளஹஸ்தி பகுதி மிதமானது முதல் கடுமையானது வரையிலான மழைப்பொழிவைப் பெறுகிறது. சமயங்களில் விடாத தொடர் மழையும் பொழிவதுண்டு. வெப்பநிலை குறைந்துவிடுவதால் மழைக்காலத்தில் சூழல் இதமாக காணப்பட்டாலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காளஹஸ்தி பகுதியின் குளிர்காலம் இந்தியாவின் வடமாநிலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இங்கு டிசம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி மாதத்தின் பாதி வரை நிலவுகிறது. இனிமையான, விரும்பத்தக்க சூழல் நிலவும் இக்காலத்தில் சராசரியாக 32° C என்ற அளவில் வெப்பநிலை காணப்படுகிறது. இரவு நேரத்தில் இன்னும் குளுமையாக காணப்பட்டாலும் கடுங்குளிர் நிலவுவதில்லை.