காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த தௌலாதார் மலைத்தொடர் ஆகும். இமயமலையின் தெற்குப்பகுதி விளிம்பில் எழும்பியுள்ள இம்மலைகள் காங்க்ரா மற்றும் மண்டி போன்ற இடங்களுக்கு வடக்கில் காணப்படுகின்றன.
பிரமிப்பூட்டும் அழகுடன் வீற்றிருக்கும் இந்த மலைத்தொடர்களில் சுற்றுலாப்பயணிகள் சாகச மலையேற்ற பயணங்களிலும் ஈடுபடலாம். ஹனுமான் கா திபா அல்லது வெள்ளை மலை என்றழைக்கப்படும் மலைச்சிகரம் இந்த மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமாக அறியப்படுகிறது.
வெளிப்புற இமயமலை அல்லது சின்ன இமயமலை என்று அழைக்கப்படும் இந்த தௌலாதார் மலைத்தொடர்கள் இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் டல்ஹௌசி பிரதேசத்தில் ஆரம்பித்து ஹிமாசலப்பிரதேசத்தில் பியாஸ் ஆற்றின் கரையிலுள்ள குல்லு மாவட்டம் வரை நீள்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து 3500 மீ முதல் 6000மீ வரையான உயரத்தில் இந்த தௌலாதார் மலைத்தொடர்கள் வானத்தை தொடுவதுபோன்று பிரம்மாண்டமாக வெள்ளை நிறத்தில் உயர்ந்து நிற்கின்றன.
இவை பெரும்பாலும் வெண்பளிங்குப்பாறைகளால் ஆனவையாக உருவாகியுள்ளன. சிலேட் பாறைகள் மற்றும் சுண்ணாம்புப்பாறைகளும் இம்மலைகளில் காணப்படுகின்றன.
சிலேட்டுப்பாறைகளை சிறு வீடுகளின் கூரையாக இம்மலைப்பகுதி மக்கள் பயன்படுத்துவது ஒரு சுவாரசியமான அம்சமாகும். காங்க்ரா வேலி எனப்படும் பள்ளத்தாக்குப்பகுதியிலிருந்து தௌலாதார் மலையின் அழகை சுற்றுலாப்பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications