ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் சிம்லா மாவட்டத்தில் இந்த மஷோப்ரா எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் உள்ளது. மலைகளின் மீது வீற்றிருக்கும் இந்த எழில் நகரம் தனது மயங்க வைக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் குளுமையான சூழலுக்கும் புகழ்பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2500 மீ உயரத்தில் உள்ள இந்த மஷோப்ரா நகரம் இண்டஸ் மற்றும் கங்கா நதிக்கரையில் அமைந்திருப்பதுடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆற்றுபடுகைப்பிரதேசமாகவும் அறியப்படுகிறது.
பிரிட்டிஷ் வைசிராய் மவுண்ட்பேட்டன் மனைவியான லேடி எட்வினா அவர்களின் வரலாற்றுக்குறிப்புகளின்படி இந்த மஷோப்ரா மலைவாசஸ்தலமானது 18ம் நூற்றாண்டில் டல்ஹௌசி பிரபுவால் நிர்மாணம் செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இந்தியாவின் குடியரசுத்தலைவர் ஓய்வுமாளிகை அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு இடங்களில் இந்த மஷோப்ராவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மஷோப்ரா பிரதேசத்தில் பழங்கள் அதிகமாக விளைவதால் சிம்லாவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அனுப்பும் முக்கிய கேந்திரமாக இது திகழ்கிறது.
சிம்லா நகருக்கு அருகிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாக விளங்கும் மஷோப்ராவில் ரிசர்வ் ஃபாரெஸ்ட் சரணாலயம் மற்றும் சிவபெருமானுக்கான மஹாசு தேவ்தா கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இந்த கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
மஷோப்ராவுக்கு வரும் பயணிகள் நேராக ரிசர்வ் ஃபாரெஸ்ட் சரணாலயத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பார்த்து ரசிக்கலாம். டிரக்கிங், கேம்பிங் மற்றும் பிக்னிக்கிங் போன்ற சுற்றுலா பொழுதுபோக்குகளில் இங்கு பயணிகள் ஈடுபடலாம்.
இவை தவிர மஷோப்ராவுக்கு அருகிலேயே சிம்லா அமைந்திருப்பது ஒரு கூடுதல் சிறப்பம்சம் எனலாம். மஷோப்ராவிலிருந்து 10 கி.மீ தூரத்திலேயே சிம்லா நகரம் உள்ளது. மலைகளின் ராணி எனப்படும் இந்நகரில் ஹிமாச்சல் ஸ்டேட் மியூசியம் அண்ட் லைப்ரரி அமைந்துள்ளது.
நல்தேஹ்ரா, வைல்ட் ஃப்ளவர் ஹால் மற்றும் கரிக்னானோ ஆகியவை மஷோப்ராவில் பயணிகளால் ரசிக்கப்படும் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். இவை தவிர ‘மஹாசு ஃபேர்’ எனும் பிரமாண்ட சந்தைத்திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.
இந்த ஊரிலுள்ள மஹாசு தெய்வத்துக்காக இந்த திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மூன்றாவது செவ்வாய் கிழமையின்போது துர்க்கா தேவி கோயிலுக்கு முன்னால் இரண்டு நாட்களுக்கு இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
மஷோப்ரா சுற்றுலாத்தலம் நாட்டில் பிற பகுதிகளுடன் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலம் இங்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் இப்பகுதியின் பருவநிலை, சூழல் போன்றவை விரும்பத்தக்கதாக உள்ளன.
குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை -10°C வரை குறைந்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடுங்குளிருக்கு பழக்கப்படாத பயணிகள் மஷோப்ராவுக்கு குளிர்காலத்தில் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.