காங்க்ராவின் தென்பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த மஸ்ரூர் கோயில் மிக முக்கியமான தனித்தன்மையான சுற்றுலா அம்சமாகும். மஸ்ரூர் கோயில் வளாகம் என்றழைக்கப்படும் இந்த கோயில் ஸ்தலத்தில் 15 பாறைக்குடைவு கோயில்கள் அமைந்துள்ளன.
இந்தியாவிலுள்ள கோயில்களிலேயே மிக வித்தியாசமான வடிவமைப்பை பெற்றுள்ள பெருமையை இந்த கோயில் வளாகம் கொண்டுள்ளது. அதிகம் பிரசித்தம் பெறாமல் வீற்றிருக்கும் இந்த அற்புத கலைச்சின்னங்கள் இந்திய மண்ணில் இடம் பெற்றுள்ள மற்றொரு முக்கியமான கலைப்படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது.
ஒரு ஒற்றை மலைக்குன்றை குறுக்கும் நெடுக்குமாக வெட்டி, குடைந்து, செதுக்கி நுணுக்கமான முறையில் சிற்பக்கலை அம்சங்களுடன் இந்த பாறைக்கோயில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கல்லை வெட்டி எடுத்து, இடம் பெயர்த்து கோயிலை உருவாக்குவதற்கு பதிலாக கல்லிருக்கும் மலையையே கோயில்களாக உருமாற்றியிருக்கும் இந்த மஹோன்னத மானுட முயற்சியை என்னவென்று சொல்வது. அற்புதமான இந்த வரலாற்று ஸ்தலத்தை நீங்கள் வந்து பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.
இந்த வளாகத்திலுள்ள 15 கோயில்களில் பிரதான கோயிலில் சிவபெருமான் மற்றும் ராமர், லட்சுமணர் சிலைகள் காணப்படுகின்றன. சிவன் சிலையானது மையத்தில் பிரதானமாக வீற்றுள்ளது.
சதுரவடிவ கர்ப்பகிருகம், அந்தரலா எனப்படும் கர்ப்பகிருஹ நடை, நான்கு பெரிய தூண்களைக்கொண்ட செவ்வக வடிவ மண்டபம் மற்றும் துணை சன்னதிகளை கொண்ட நான்கு முக மண்டபங்கள் போன்றவை இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர ஏராளமான சிற்பங்களும் சன்னதி அமைப்புகளும் இந்த கோயில் வளாகத்தில் பரவலாக காணப்படுகின்றன.
இந்தோ-ஆரிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் தொகுப்பு வளாகம் 10 நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அஜந்தா எல்லோரா கோயில்களை இது ஒத்திருப்பதாகவும் நிபுணர்களிடையே கருத்துகள் நிலவுகின்றன.
சிவபெருமானுக்காக படைக்கப்பட்டுள்ள இந்த கோயில் வளாகத்தில் காணப்படும் கட்டிடக்கலை அம்சங்கள் 8 ம் நூற்றாண்டு அல்லது 9ம் நூற்றாண்டுக்குரியவை என்று வரலாற்றாசிரியர்களால் ஊகிக்கப்படுகிறது.