இமாச்சல பிரதேசத்தின் எழில் கொஞ்சும் மாவட்டமாக திகழ்ந்து வரும் சோலனில் அதிகமான காளான் விவசாயம் நடைபெறுவதால் ’இந்தியாவின் காளான் நகரம்’ என்று அழைக்கப்படுகின்றது. இங்கு முக்கிய தெய்வமாக வழிபடப்படும் சோலொனி தேவி என்னும் இந்து தெய்வத்தின் பெயரை அடிப்படையாக கொண்டு இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. இந்த இடம் முழுவதையும் அடர்ந்த காடுகளும், உயர்ந்த மலைகளும் சூழ்ந்து காட்சியளிக்கின்றன.
சோலன் நகரத்தின் கிழக்கே 1986 மீட்டர் உயரத்தில் வானுயர நிற்கிறது மேடியுல் சிகரம். அதேபோல மற்றொரு உயர்ந்த சிகரமான கேரல் சிகரம் இந்நகரத்தின் வடக்கே அமைந்திருக்கிறது.
இவைதவிர கந்தகாட், காசாவ்லி, சாலி, தக்ஷாய் போன்ற மற்ற பிரபல்யமான மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள சோலன் அடித்தளமாக விளங்குகின்றது.
இந்த இடம் ஏராளமான குன்றுகளும், மலைகளும் நிறைந்த காட்டுப்பகுதியாக இருப்பதால், இங்கே கட்டுமானப்பணி சாத்தியமற்றது. கேரல் சிகரத்தின் அருகே ஒரு குகை இருக்கிறது.
இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய வனவாசத்தின்போது தங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. 1920ல் ஆங்கிலேய ராணுவத்துக்கு எதிரான ஐரிஷ் கலகம் இந்த இடத்தில் தான் உருவானது என்பது இந்த இடத்திற்கு மகத்தான வரலாற்று முக்கியத்துவத்தை கொடுக்கின்றது.
இரண்டு ஐயர்லாந்து சிப்பாய்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட போது இந்த கலகம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்ட பல சிப்பாய்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
யுங்ட்ரங் திபெத்திய மடம், சோலொன் தேவி கோவில், கூர்க்கா கோட்டை மற்றும் ஜடோலி சிவன் கோவில் ஆகியவை சோலன் நகரின் முக்கிய சுற்றுலா தளங்களில் சில.
அடிப்படையில் சோலன் ஒரு தொழிற்சாலை நகரம் என்பதோடு நகரின் பொருளாதாரத்திற்கு இந்த தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஹிமாலயன் பைப் இன்டஸ்ட்ரீஸ், எச்எஃப்சிஎல் மற்றும் பைமெடல் கன்ட்ரோல்ஸ் லிமிடெட் ஆகியவை இங்குள்ள சில புகழ்பெற்ற நிறுவனங்கள் ஆகும்.
சோலனில் இருந்து 67 கி.மீ தூரத்தில் சண்டிகர் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமானநிலையம் மும்பை, புது தில்லி, ஸ்ரீநகர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களோடு சோலனை இணைக்கின்றது.
அதோடு ரயில் மூலம் சோலனை அடைய விரும்பும் பயணிகள் கால்கா ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து எளிதில் சோலன் நகரை அடைந்து விட முடியும். மும்பை, கொல்கத்தா, தில்லி, அமிர்தசரஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கிய நகரங்களை கால்கா ரயில் பாதை இணைக்கின்றது. சாலை வழியாக சோலனை அடைய, தில்லி மற்றும் சண்டிகரில் இருந்து பேருந்துகளில் பயணிக்கலாம்.
ஆண்டு முழுவதும் சோலனின் வானிலை அருமையாக இருக்கும். ஆண்டின் எந்த பகுதியிலும் இந்த எழில்மிகும் இடத்திற்கும் பிரயாணம் செய்ய பயணிகள் திட்டமிடலாம்.