ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் இந்த கசௌலி எனும் பிரசித்தமான மலைவாசஸ்தலம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புராணத்தின்படி ஹனுமான் சஞ்சீவனி மலையை தூக்கிவரும்போது இந்த மலையை கடந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஜப்லி மற்றும் கசௌலிக்கு இடையே ஓடும் மலையோடை கௌசல்யா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
19ம் நூற்றாண்டில் கூர்க்கா மண்டலத்தின் முக்கிய அங்கமாக கசௌலி மாறியது. பின்னர் இந்த இடம் ஆங்கில அரசாங்கத்தால் ஒரு முக்கியமான ராணுவக்கேந்திர நகரமாக மாற்றப்பட்டது.
இந்த இடத்தில்தான் பல இந்திய மற்றும் உள்ளூர் மக்கள் ஆங்கிலேய ராணுவப்படையில் சேர்ந்திருக்கின்றனர். 1857ம் ஆண்டில் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் முன்னெடுப்பான சிப்பாய் கலகத்தின்போது கசௌலி நகரத்திலும் இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு புரட்சியில் இறங்கினர்.
கூர்க்கா இனத்தாருடன் கை கோர்த்து களமிறங்கிய இவர்களை பின்னாளில் கூர்க்கா பிரிவினர் புறக்கணித்து விலகிவிட்டனர். இப்படி புரட்சியில் ஈடுபட்ட வீரர்களை ஆங்கிலேய அதிகாரிகள் பின்னர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தினர்.
தற்போது கசௌலி நகரம் இந்திய ராணுவப்படையினரின் கண்டோன்மெண்ட் பகுதியாக திகழ்கிறது. சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கசௌலி கிளப் மற்றும் லாரென்ஸ் ஸ்கூல் ஆகியவை உலகளாவிய அளவில் புகழ்பெற்ற அம்சங்களாக கசௌலி நகரத்தில் அமைந்துள்ளன.
இயற்கை அம்சங்கள் நிறைந்த சூழலின் மத்தியில் வீற்றுள்ள இந்நகரத்தில் கிறிஸ்ட் சர்ச், மங்கீ பாயிண்ட், கசௌலி புரூவரி, பாபா பாலக் நாத் கோயில் மற்றும் கூர்க்கா ஃபோர்ட் ஆகிய இதர சுற்றுலா அம்சங்களும் காணப்படுகின்றன.
கசௌலி நகரத்தை பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். சண்டிகர் விமான நிலையம் 59 கி.மீ தூரத்தில் அருகில் உள்ள விமான நிலையமாக அமைந்துள்ளது. ஷீநகர், கொல்கத்தா, நியூடெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன.
கசௌலிக்கு அருகில் 40 கி.மீ தூரத்தில் கல்கா ரயில் நிலையம் உள்ளது. ஹிமாசலப்பிரதேசத்தின் எல்லா இடங்களிலிருந்தும் கசௌலி நகரத்துக்கு நல்ல முறையில் பேருந்து வசதிகளும் உள்ளன. சாதகமான சீதோஷ்ணநிலை நிலவுவதால் வருடத்தின் எந்த பருவத்திலும் இந்த மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.