இந்தியாவிலுள்ள இயற்கைக்கோட்டை அமைப்புகளில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ள இந்த சைதுர்கர் கோட்டை லஃபார்கர் என்றும் அழைக்கப்படுகிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள 36 கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.
பாலி எனும் இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த சைதுர்கர் கோட்டை உள்ளது. பிரம்மாண்டமான இயற்கை சுவர்களை கொண்டிருப்பது இந்த கோட்டையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
இணைப்பதற்காக சிறிய அளவில் மட்டுமே ஆங்காங்கு செயற்கை சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் பிரித்விதேவா எனும் மன்னர் இந்த கோட்டையை கட்டியுள்ளார்.
இந்த கோட்டைக்குள் செல்வதற்கு மேனகா, சிம்மத்வார் மற்றும் ஹும்காரா எனப்படும் மூன்று நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கோட்டை வளாகத்தின் உள்ளே மஹிசுராமர்த்தினி கோயில் அமைந்துள்ளது. 12 கரங்களுடன் இந்த மஹிசுராமர்த்தினி சிலை காட்சியளிக்கிறது. இந்த கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் ஷங்கர் குகை என்ற சுரங்கக்குகை அமைப்பும் உள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள ஐந்து குளங்களை சுற்றிலும் பசுமையான மரங்கள் மற்றும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் பார்க்கலாம். ரம்மியமான இயற்கைக்காட்சிகள் நிறைந்த ஒரு அற்புத இயற்கை ஸ்தலமாக இந்த கோட்டைப்பகுதி காட்சியளிக்கிறது.