இந்தியாவில் கடைக்கோடி தென் எல்லையில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்திருக்கும் அமைதி நிறைந்த நகரம் நாகர்கோவில். இயற்கை எழில் எல்லையின்றி வாய்த்திருப்பதால் செயற்கையான பெருநகரங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான ஊராக நாகர்கோவில் விளங்குகிறது.
ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நாகராஜ கோவிலின் பெயரால் இவ்வூர் நாகர்கோவில் என வழங்கப்படுகிறது. மாநிலமெங்கும் இருந்து நாகராஜரை வழிபட இவ்வூருக்கு இந்துக்கள் வருகிறார்கள்.
வருடம் முழுதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழியும் நாகர்கோவிலில் ஒரு காலத்தில் பெரிய ஜைனக் கோவில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
நாகர்கோவில் மக்கள் வீரம் செறிந்த தங்கள் வரலாற்றின்பால் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னும் பத்து வருடங்களுக்கு நாகர்கோவில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாகவே விளங்கியது.
1956ஆம் ஆண்டில்தான் நாகர்கோவிலும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த காலகட்டத்தில் இவ்வூர் நாஞ்சில் நாடு என வழங்கப்பட்டது.
விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக இருந்ததால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே நாகர்கோவிலை கைப்பற்ற பல போர்கள் வரலாறெங்கும் நடந்திருக்கிறது. அதனால் பல வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களாலும் ஆளப்பட்ட ஊராக நாகர்கோவில் விளங்குகிறது.
அருவி மற்றும் இயற்கை எழில்
அரபிக்கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே இருக்கும் நாகர்கோவிலைச் சுற்றி அமைந்திருக்கும் இயற்கைச் சூழலின் காரணமாக சுற்றுலாப் பயணிகளால் தமிழ்நாட்டில் பெரிதும் விரும்பப்படும் இடமாக நாகர்கோவில் விளங்குகிறது.
சிறிய குன்றுகளும், பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளும், நீலக்கல் போன்ற பொழிவுடன் விளங்கும் கடலும் முதல்முறை காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அழகுடன் விளங்குகிறது.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் நாகர்கோவிலுக்கு வருகை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இயற்கை அழகினால் சிறந்து விளங்கும் நாகர்கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக ஓலக்கருவி நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
நாகர்கோவில் நகரவாழ் மக்கள் அமைதியை விரும்புபவர்களாகவும், சுற்றுலாப் பயணிகளை அன்புடன் நடத்தும் விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மிகவும் பாதுகாப்பான சுற்றுலாத்தளமாக விளங்கும் நாகர்கோவிலில் குற்றச் சம்பவங்கள் மிகக் குறைவாகவே நடக்கிறது.
மேலும் உள்ளூர்ப் பிரச்சினைகளை மக்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி முடித்துக்கொள்கிறார்கள். வன்முறையில் இறங்குவதோ, எதற்கெடுத்தாலும் அதிகாரிகளிடம் முறையிடும் வழக்கமோ இங்கு இல்லை.
சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட கிராம்பு, ஏலக்காய் தோட்டங்கள் இன்னமும் இருக்கின்றன. அவர்களின் வம்சாவளியினருக்கு சொந்தமாக இன்னும் பல தோட்டங்கள் இங்கு உண்டு. தோட்டத்தில் கால் பதித்தவுடன் ஏலக்காய் வாசனை மதிமயங்கச் செய்கிறது.
தனித்துவமிக்க பூலோக அமைப்பால் நாகர்கோவில் வடக்கு மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளின் கலாச்சாரங்களின், பழக்கவழக்கங்களின் சங்கமமாக விளங்குகிறது. மேற்கு ரயில் மற்றும் வடக்கு ரயில்வேயின் சந்திப்பிடமாகவும் நாகர்கோவில் இருக்கிறது.
நாகர்கோவிலில் இருந்து ஒரு ரயில்வழி கேரளா வழியாக கொங்கன் வழித்தடத்திற்கும், மற்றொரு ரயில்வழி தமிழ்நாடு வழியாக திருநெல்வேலி வழித்தடத்திற்கும் செல்கிறது.
தட்பவெட்பநிலையும், வழித்தடங்களும்
நாகர்கோவில் நகரை தரை மற்றும் ரயில் மார்க்கமாக எளிதில் அடையலாம். தார்ச்சாலைகளும், பல முக்கிய நகரங்களுடன் ரயில்போக்குவரத்தும் அமைந்திருக்கிறது.
நாகர்கோவிலின் கோடை காலங்கள், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளோடு ஒப்பிடுகையில் இதமான வெப்பநிலையையே கொண்டிருக்கிறது.
அதேசமயம் வட இந்திய குளிர்காலத்தைப் போல மிக அதிகமான பனி இன்றி ரம்மியமான குளிருடன் இதமாக விளங்குகிறது நாகர்கோயிலின் குளிர்காலங்கள். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நாகர்கோவில் பயணப்படவே பல சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்.