பேடி ஹனுமான் கோயில், அதன் பெயரே உணர்த்துவது போல், சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள ஹனுமான் கோயிலாகும். பூரியிலுள்ள சக்ரநாராயணன் திருக்கோயிலுக்கு மேற்குப்புறத்தில், கடலுக்கு அருகில் அமைந்துள்ள இச்சிறிய கோயில், தரியா மஹாவீர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது.
இதில் “தரியா” என்பது கடலையும், மஹாவீர் என்பது ஹனுமானின் மற்றொரு பெயரையும் குறிக்கின்றன. முன்னொரு காலத்தில், பூரியை கடலின் சீற்றத்தில் இருந்து காக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஹனுமான், ஜகன்னாதரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அயோத்திக்குச் சென்ற போது, கடல் நீர் நகருக்குள்ளே புகுந்து, கோயிலுக்கு பாதிப்பு உண்டாக்கியுள்ளது.
இக்கோயிலின் எதிர்கால பாதுகாப்பை உத்தேசித்து, ஜகன்னாதர் ஹனுமானை ஒரு சங்கிலியால் பிணைத்து, அல்லும் பகலும் கோயிலுக்கு காவல் இருக்கும்படி உத்தரவிட்டார்.
கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் பல்வேறு தெய்வங்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. அஞ்சனை சிறு குழந்தையை தன் மடியில் கிடத்தி சீராட்டுவது போல் மேற்குப்புற சுவரில் சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியமும், அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது போல் வடக்குப்புற பக்கவாட்டுச் சுவரில் காணப்படும் ஓவியமும், தெற்குப்புற பக்கவாட்டுச் சுவரில் காணப்படும் கணேசரின் ஓவியமும் பூரியின் கலாச்சாரப் பெருமைக்கு மேலும் அணி சேர்க்கின்றன.