ஓவியம் போன்ற அழகுடன் காட்சியளிக்கும் இந்த குளத்துப்புழா எனும் கிராமம் கொல்லம் மாவட்டத்தில் தேன்மலா மலைப்பிரதேசத்துக்கு அருகிலேயே உள்ளது. திருவனந்தபுரம் – செங்கோட்டை சாலையிலுள்ள இந்த கிராமம் திருவனந்தபுரத்திலிருந்து 62 கி.மீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கி.மீ தூரத்திலும் உள்ளது.
குளத்துப்புழா கிராமமானது இங்கு ‘பால சாஸ்தா’ என்ற தெய்வம் குடிகொண்டுள்ள ஒரு சாஸ்தா கோயிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இந்த கடவுள் ஹரிஹரபுத்ரா என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.
கல்லடா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஸ்தலம் அமைதியான இயற்கை அழகுடன் பார்வையாளர்களை கவர்கிறது. விஷு மஹோத்சவம் எனும் முக்கியமான திருவிழா இந்த கோயிலில் ஏப்ரல் மாதத்தின்போது கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் திரண்டு வந்து பங்கேற்கின்றனர்.
இந்த கிராமத்தை சுற்றி 1000 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பாதுகாப்பு வனச்சரகமும் அமைந்துள்ளது. ராக் வுட் எஸ்டேட் மற்றும் செந்தூர்ணி காட்டுயிர் சரணாலயம் போன்ற முக்கிய சுற்றுலா அம்சங்களும் குளத்துப்புழாவுக்கு அருகில் அமைந்துள்ளன.
ஐயப்ப யாத்திரையில் முக்கிய அங்கம் வகிக்கும் மூன்று சன்னதிகள் அமைந்திருக்கும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யங்காவு மற்றும் அச்சன்கோயில் என்பவை மற்ற இரண்டு திருத்தலங்களாகும்.
பரந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த சிறிய கிராமமானது, பரபரப்பான நகரச்சந்தடியை விட்டு விலகி நிசப்தம் நிலவும் கிராமிய இயற்கை அழகை தரிசிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.



Click it and Unblock the Notifications