கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தாபுரம் தாலுக்காவில், திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.தென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ் பெற்று விளங்குகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான இயற்கை வளத்தை பெற்றிருக்கும் இந்த பள்ளத்தாக்கு பகுதியை சமீபத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜய்ராம் ரமேஷ் அமைதிப்பள்ளத்தாக்கு என்று வர்ணித்துள்ளார்.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்ற பிரசித்தமான நீர்வீழ்ச்சியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை நீர்வீழ்ச்சிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் இந்த அதிரப்பள்ளி கிராமப்பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியின் இயற்கை வளம் கேரளாவில் வேறெங்கும் காணமுடியாத தனித்தன்மையான செழிப்பை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தாவரப்பசுமை நிரம்பி வழியும் மலைப்பிரதேசம்
மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதி அடர்த்தியான தாவரங்களுடனும் பலவகைப்பட்ட உயிரினங்களுடனும் காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி அதிரப்பள்ளி வழச்சல் வனப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.
அருகி வரும் பல உயிரினங்களும் பறவைகளும் இந்த காடுகளில் வசிக்கின்றன. இந்திய காட்டுயிர் அறக்கட்டளை அமைப்பு இந்த அதிரப்பள்ளி வனப்பகுதியை இந்தியாவிலேயே மிகச்சிறந்த யானைகள் பாதுகாப்பு ஸ்தலமாக குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச பறவைகள் அமைப்பு அதிரப்பள்ளி வனப்பகுதியை ஒரு முக்கிய பறவைகள் சரணாலயமாகவும் அங்கீகரித்துள்ளது. இருவாச்சி எனும் அருகி வரும் பறவையினத்தின் இங்கு நான்கு வகைகள் இங்கு வசிக்கின்றன.
இங்கு காணப்படும் தாவரவகைகளும் உயிரினங்களும் பலவகைகளை சார்ந்தனவாக காணப்படுகின்றன. ஆசிய இயற்கை பாதுகாப்பு மையமானது அதிரப்பள்ளி வனப்பகுதியை தேசியப்பூங்காவாகவும் சரணாலயமாகவும் அறிவிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இந்த வனப்பகுதி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதிரப்பள்ளி, வழச்சல், சர்ப்பா, கொளத்திருமேடு மற்றும் சோலையார் போன்றவையே அவை.
இங்குள்ள எல்லா நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுக்கு நல்ல சாலைகளும் பாதை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் பயணிகள் அதிக கவனத்துடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகும்.
மழைக்காலத்தில் சிறு ஓடைகளும் சாலக்குடி ஆறும் நிரம்பி வழிந்தோடுவதால் ரம்மியமாக காட்சியளிக்கின்றன. பலவிதமான காட்டுயிர் அம்சங்கள் நிரம்பி வழியும் இந்த வனப்பகுதி மனித ரசனைக்காகவே காத்திருக்கிறது.
நீர்வீழ்ச்சிகளும் சொக்க வைக்கும் இயற்கை எழிலும்
இங்குள்ள காடுகளில் கோடர்கள் எனும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தேன், மெழுகு, ஏலம், இஞ்சி போன்ற இயற்கை விளைபொருட்களை சேகரித்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இந்த பழங்குடி மக்களின் கிராமத்துக்கு விஜயம் செய்து இவர்களின் வாழ்க்கை முறையையும் பயணிகள் நேரில் கண்டு ரசிக்கலாம். ஆதிகுடிகள் வசிக்கும் இந்தக் கிராமமானது ‘கடவுளின் சொந்த தேசம்’ என்ற பெருமையை பெற்றுள்ள கேரளப்பகுதியின் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள நீர்வீழ்ச்சிகளை பார்த்தால் எந்த அளவுக்கு நீங்கள் பிரமிப்பீர்கள் என்பதை நேரில்தான் நீங்கள் உணரமுடியும். அப்படி ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அழகுடன் இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் காட்சியளிக்கின்றன.
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, வழச்சல் நீர்வீழ்ச்சி மற்றும் சர்ப்பா நீர்வீழ்ச்சி போன்றவை அதிரப்பள்ளியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன. நீர்வீழ்ச்சிக்கான அனுமதி சுற்றுலா மற்றும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பொதுவாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நீர்வீழ்ச்சிகளுக்கு விஜயம் செய்யலாம். மலையேற்றம், பிக்னிக் சிற்றுலா, ஷாப்பிங், மிதவைப்படகு சவாரி மற்றும் இதர பொழுது போக்கு அம்சங்கள் அதிரப்பள்ளியில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
இவை தவிர ‘டிரீம்வேர்ல்டு’ மற்றும் ‘சில்வர்ஸ்டார்ம்’ என்ற இரண்டு பொழுதுபோக்கு பூங்காக்களும் அதிரப்பள்ளிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அதிரவைக்கும் தரிசனத்தை அளிக்கும் இந்த அதிரப்பள்ளி பகுதிக்கு இதுவரை நீங்கள் விஜயம் செய்ததில்லை என்றால், அடுத்து சுற்றுலாவுக்கான ஸ்தலமாக யோசிக்காமல் இந்த அதிரப்பள்ளி சுற்றுலாக்கிராமத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் இங்கு விஜயம் செய்வது உகந்தது. சாலை மார்க்கமாக நல்ல போக்குவரத்து வசதிகளை இது கொண்டுள்ளது. அருகிலுள்ள விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் மூலமாக அதிரப்பள்ளிக்கு வந்து சேரலாம்.