கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள நீலம்பூர் ‘தேக்கு மரத்தோட்டங்களின் பூமி’ என்ற புகழுடன் அறியப்படும் ஒரு நகரமாகும். பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில், வித்தியாசமான காட்டுயிர் அம்சங்கள், கண்ணைக்கவரும் நீர்நிலைகள், ராஜகம்பீர இருப்பிடங்கள் மற்றும் உயிரோட்டமான காலனிய வரலாற்றுப்பின்னணி போன்ற அம்சங்களுடன் காட்சியளிக்கும் நீலம்பூர் மலபார் கேரளப்பகுதியிலுள்ள ஒரு முக்கிய நகரமாகும்.
தனித்தன்மையான புவியியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்நகரம் நீலகிரி மலை, எரநாடு, பாலக்காடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களுடன் தன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.
சாலியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நீலம்பூர் நகரம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பசுமைச்சூழல் மற்றும் வளம் நிரம்பிய இயற்கைக்காட்சிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.
நல்ல சாலை வசதிகளைக் கொண்டுள்ள இந்நகரத்திற்கு அருகிலுள்ள முக்கிய நகரங்களான மலப்புரம் டவுன் (40கி.மீ), கோழிக்கோடு (72கி.மீ), திரிச்சூர்(120கி.மீ), கூடலூர்(50கி.மீ) மற்றும் ஊட்டி(100கி.மீ) போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக சென்றடையலாம்.
தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற கலையம்சங்களின் அடையாளம்
வித்தியாசமான் புவியியல் அமைப்பு காரணமாக நீலம்பூர் பிரதேசம் மாறுபட்ட கலாச்சார அடையாளத்துடன் காட்சியளிக்கிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே இப்பகுதியை ஆண்ட ராஜ வம்சத்தினரின் நாகரிகம் மற்றும் பின்னாளில் மெட்ராஸ் பிரசிடென்சியின் அங்கமாக ஆட்சி செய்யப்பட்டபோது ஏற்பட்ட தாக்கம் போன்றவற்றால் இப்பகுதியின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் கேரளாவின் ஏனைய பகுதிகளைவிட மாறுபட்டு காட்சியளிக்கின்றன.
நீலம்பூர் பாட்டு அல்லது நீலம்பூர் ‘வேட்டக்கொரு மகன் பாட்டு’ என்றழைக்கப்படும் இசைப்பாடல் வடிவம் இந்த நகரத்துக்கு சொந்தமான பாரம்பரிய கலையம்சமாகும். வருடாவருடம் நீலம்பூர் ‘கோவிலகம்’ கோயிலில் இந்த இசைப்பாடல் நிகழ்ச்சியின் அரங்கேற்றம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
கேரள பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களிலும் தனது பங்களிப்பை இந்த நீலம்பூர் நகரம் அளித்துள்ளது. கோவிலகம் எனப்படும் ராஜரீக அரண்மனை மாளிகைகள் இந்த நீலம்பூர் நகரத்தில் கம்பீரமாக வீற்றுள்ளன.
கடந்துபோன ராஜாங்க ஆட்சிக்காலத்தில் மன்னர்கள் வசித்திருந்த மாளிகைகளே இவை. நுட்பமான மர வேலைப்பாடுகள் மற்றும் கலையம்சம் வழியும் சுவரோவியங்களுக்காக இந்த அரண்மனை மாளிகைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்று அறியப்படுகின்றன.
கண்ணைப்பறிக்கும் மலர்த்தாவரங்கள் மற்றும் செழுமையான தாவர வகைகள்
உலகிலேயே மிகப்பழமையான ‘கொனொல்லி பிளாட்’ எனப்படும் தேக்குமரத் தோட்டம் நீலம்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் தேக்கு அருங்காட்சியகமும் இந்த நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மிக அழகான காட்சிக்கூடத்தை கொண்டிருக்கும் இந்த மியூசியத்தில் தேக்கு மரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அத்தனை விஷயங்களையும் தாவரவியல் ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம்.
உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான தேக்கு மரம் ஒன்றும் நீலம்பூர் தேக்கு பாதுகாப்பு பண்ணையில் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மூங்கில் மரங்களையும் அதிகம் கொண்டிருக்கும் இந்த நகரம் மூங்கிலை தன் பெயரிலேயே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நீலம்ப எனும் சொல்லுக்கு மூங்கில் என்பதே பொருளாகும். நீலம்ப + ஊர் என்பதே நீலம்பூர் என்றானது.
நீலம்பூர் நகரத்தின் வனப்பகுதியானது மூன்று மாநிலங்களை சேர்ந்த காட்டுயிர் சரணாலயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் பண்டிபூர் சரணாலயம், தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயம், கேரளாவின் வயநாட் சரணாலயம் ஆகியவையே அவை. தேக்கு மட்டுமல்லாமல் கடம்ப மரம், வெண்தேக்கு மற்றும் கருங்காலி போன்ற முக்கியமான மரவகைகளும் இங்கு வளர்கின்றன. ‘சோலைநாயக்கர்கள்’ எனப்படும் கேரளப் பழங்குடி இன மக்கள் இங்குள்ள காடுகளில் வசிக்கின்றனர்.
ரசனை மனம் கொண்டவர்களுக்கு கண்டு ரசிக்க ஏராளம்
வெளிச்சுற்றுலா அம்சங்களுக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லும்படியாக நீலம்பூரில் ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பியுள்ளன. ‘கொனொல்லி பிளாட்’ எனப்படும் தேக்குமரத் தோட்டம் மற்றும் தேக்கு அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் இடங்களாக உள்ளன.
சிற்றோடைகள் போன்று வழிந்து விழும் அடயன்பாறா நீர்வீழ்ச்சி மற்றும் வெல்லம்தோடே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டும் இயற்கை எழில் அம்சங்கள் சூழ்ந்து காட்சியளிக்கின்றன.
நீலம்பூருக்கு அருகிலுள்ள நெடுங்காயம் என்ற இடத்தில் மழைக்காடுகள், யானைக் காப்பிடங்கள் மற்றும் மரவீடுகள் போன்றவை அமைந்துள்ளன. அருவக்கோட் எனும் சிறு கிராமம் மண்பாண்ட தயாரிப்புகளுக்கும் சுடுமண் கைவினைப்பொருட்களுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது.
நீலம்பூர் பயோ ரிசோர்சஸ் பார்க்’ என்று அழைக்கப்படும் ‘உயிரியல் பூங்கா’ இங்குள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இதற்கு அருகிலேயே ‘பட்டர்ஃப்ளை பார்க் எனும் மற்றொரு பூங்காவும் அமைந்துள்ளது.
சைலண்ட் வேலி என்றழைக்கப்படும் அமைதிப்பூங்காவை ஒட்டியே அமைந்துள்ள ‘ நியூ அமராம்பலம் பாதுகாப்பு வனப்பகுதி’ இங்குள்ள அரிய வகை பறவையினங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.
இவை தவிர நீலம்பூர் கோவிலகம் கோயிலும் ஏராளமான பக்தர்களையும் பார்வையாளர்களையும் வருட முழுதும் ஈர்த்து வருகிறது. இந்த கோயிலின் குடிகொண்டுள்ள தெய்வம் வேட்டக்கொருமகன் என்று அழைக்கப்படுகிறது.
நீலம்பூர் பகுதியில் நிறைய ரிசார்ட் தங்கும் விடுதிகள் மட்டுமல்லாமல் ‘வீட்டுத்தங்கல்’ (விருந்தினர் போன்று உள்ளூர் பாரம்பரிய வீடுகளில் தங்குவது) வசதிகளும் பயணிகளுக்காக கிடைக்கின்றன.
இங்குள்ள உணவுவிடுதிகளில் மலபார் பாரம்பரிய உணவுவகைகள் தனித்தன்மையான சுவையோடு பரிமாறப்படுகின்றன. இனிமையான சீதோஷ்ணநிலை மற்றும் நல்ல போக்குவரத்து வசதிகளை பெற்றுள்ள இந்த தேக்கு நகரம் பலவிதமான சுற்றுலா அம்சங்கள் மற்றும் இயற்கைக்காட்சிகளுடன் பயணிகளை கவர்ந்து வருகிறது.