நீலம்பூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குரும்பலங்கோட் எனும் இடத்திலுள்ள இந்த அடயன்பாறா என்ற அழகிய நீர்வீழ்ச்சி ஏராளமான சுற்றுலாப்பயணிகளையும் இயற்கை ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கிறது. நீலம்பூரிலிருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்துக்கு சென்றடையலாம்.
பசுமையான இயற்கைச்சூழல் மற்றும் எழிற்காட்சிகளின் பின்னணியில் பிரம்மாண்டமான பாறைகளின் மீதிருந்து வழியும் இந்த நீர்வீழ்ச்சி காண்போரை வசப்படுத்தி விடுகிறது.
பாறைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியின் முடிவில் ஒரு குளம்போன்ற நீர்த்தேக்க அமைப்பு பயணிகளை வெகுவாக கவர்கிறது. சுற்றிலும் நிசப்தம் கவிழ்ந்திருக்க சில்லென்ற இந்த அருவித்தடாகத்தில் குளிக்கும் அனுபவமானது நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்க வைக்கும் ஒரு இனிப்பு ஞாபகமாக பதிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
வெள்ளரிமலை எனும் புகழ்பெற்ற மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் இந்த நீர்வீழ்ச்சியின் மலை ஓடையானது அடர்ந்த காடுகளின் வழியே பாய்ந்து இறுதியில் சாலியார் ஆற்றுடன் இணைகிறது.
300 அடி உயரத்திலிருந்து விழும் அடயன்பாறா நீர்வீழ்ச்சி எப்போதும் வற்றாமல் ஊற்றுவதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் பிக்னிக் மற்றும் குடும்ப சிற்றுலாவுக்கு ஏற்ற ஒரு எழிற்பிரதேசமாக இந்த அடயன்பாறா நீர்வீழ்ச்சி பிரசித்தி பெற்றுள்ளது.