கேரளாவின் வடதிசை மாவட்டமான மலப்புரம், அதன் புராதனம், வலராறு மற்றும் கலாச்சாரத்துக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மாவட்டம் மலைகளாலும், சிறு குன்றுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மலையாளத்தில் 'மலை உச்சி' என்று பொருள்படும்படி மலப்புரம் என அழைக்கப்படுகிறது.
இங்கு சமீப காலங்களாக வளைகுடா நாடுகளிலிருந்து அதிக அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருவதால் முன்பெப்போதும் இல்லாத அளவு மலப்புரம் மாவட்டம் பொருளாதரத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வல்லுனர்களின் பார்வை மலப்புரம் மாவட்டத்தின் மீது விழத் தொடங்கி இருக்கிறது.
மலப்புரம் மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதிகளாக ஓடிக் கொண்டிருக்கும் சாளியாறு, பாரதப்புழா, கடலுண்டி ஆகிய மூன்று நதிகளும் மலப்புரத்தின் மண் வளத்துக்கும், கலாச்சார மேன்மைக்கும் முக்கிய காரணங்களாக திகழ்ந்து வருகின்றன.இந்த மாவட்டம் கோழிக்கோட்டின் ஜமோரின் மகாராஜாக்களின் ஆற்றல்மிக்க ராணுவத்தின் தலைமையிடமாக விளங்கி வந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்திய சுதந்திர போர் நடைபெற்று வந்த காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளான கிலாஃபத் இயக்ககமும், மாப்ளா கிளர்ச்சியும் நடந்தேறிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மலப்புரம் பிரபலமாக அறியப்படுகிறது. இவைதவிர இஸ்லாமிய நடன வடிவமான 'ஒப்பனா' மலப்புரம் மாவட்டத்தில்தான் தோன்றியதாக கூறப்படுகிறது.
வேறுபட்ட பாரம்பரியங்கள் மற்றும் தனித்துவமான சுற்றுலா மையங்கள்
கேரளாவின் கலாச்சார, அரசியல் மற்றும் இலக்கிய பாரம்பரியத்துக்கு மலப்புரம் மாவட்டத்தின் பங்களிப்பு மகத்தானது. இந்த மாவட்டத்தின் திருநாவாயா ஸ்தலம் இடைகாலங்களில் வேத கல்விக்கு மையமாக விளங்கி வந்தது.
அதோடு கோட்டக்கல் கிராமம் ஆயுர்வேத மருத்துவத்தின் பிறப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இவைதவிர இஸ்லாமிய கல்வி முறையின் மையமாக விளங்கிய பொன்னனியும், தேக்கு நகரமான நீலம்பூரும் மலப்புரம் மாவட்டத்துக்கு உலக அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவை.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக கடலுண்டி பறவைகள் சரணாலயம், கேரளதேஷ்புரம் கோயில், திருநாவாயா கோயில் போன்றவை அறியப்படுகின்றன.
மேலும் மலப்புரம் ஜூம்மா மஸ்ஜித், மன்னூர் சிவன் கோயில், வேட்டக்கொருமகன் கோயில், கோட்டக்குன்னு ஹில் கார்டன், பீயம் ஏரி, ஷாந்திதீரம் ரிவர்சைட் பார்க் உள்ளிட்ட பகுதிகளும் நீங்கள் மலப்புரம் மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.
மலப்புரம் மாவட்டத்தை வான் வழியாகவோ, ரயில் மற்றும் சாலை மூலமாகவோ சுலபமாக அடைந்து விட முடியும். அதோடு இந்த மாவட்டம் ஆண்டு முழுவதும் மிதமான வானிலையையே கொண்டிருக்கும்.
இங்கு இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசித்து வருவதால் அரேபிய மற்றும் பாரம்பரிய கேரள உணவுகளின் கலவையில் புது விதமான உணவு வகைகளை நீங்கள் மலப்புரம் வரும் போது சுவைத்து மகிழலாம்.