வெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் திரிசூர் நகரத்தை தேர்வு செய்யலாம். கேரள மாநிலத்தின் கலாச்சார தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இந்த திரிசூர் நகரத்தில் கடவுளால் உருவாக்கப்பட்ட இயற்கை வனப்பையும் மனித முயற்சியால் படைக்கப்பட்டிருக்கும் கலையம்சங்களின் வரிசைகளையும் பயணிகள் தரிசிக்கலாம்.
சிவபெருமானின் திருத்தலம் எனும் பொருளைத்தரும் திருச்சிவபேருர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்நகரம் திருச்சூர் என்று மாறி தற்போது திரிசூர் என்றே அழைக்கப்படுகிறது. வடக்கும்நாதன் ஷேத்திரம் எனும் இடத்தில் ஸ்தல தெய்வமான சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.
கடந்துபோன உன்னதங்களின் சாட்சியங்கள்
பெயருக்கேற்றபடி இந்த கோயில் ஸ்தலமானது தெய்வீக மணம் வீசும் சூழல், இயற்கை எழில் மற்றும் மண்ணுக்கேயுரிய பாரம்பரிய அம்சங்கள் போன்றவற்றை தன் அடையாளங்களாக கொண்டுள்ளது.
இங்குள்ள புராதன கோயில்களில் மிளிரும் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் பல்வேறு வரலாற்றுக்கால ஆவணங்களைக் கொண்ட அருங்காட்சியகங்கள் போன்றவை இங்கு வருகை தரும் பயணிகளை பிறிதொரு கடந்துபோன காலகட்டத்துக்குள் இழுக்கின்றன.
உள்ளூர் பாரம்பரியத்தோடு, போர்த்துகீசிய, டச்சு மற்றும் ஆங்கிலேய ஆட்சிகளை சந்தித்திருப்பதால் இந்நகரம் கலவையான செழுமையான பாரம்பரிய அம்சங்களை தன்னுள் பொதித்துள்ளது.
நகரம் மட்டுமல்லாமல் அருகிலும் ஏராளம் உண்டு
திரிசூர் சுற்றுலாப்பயணத்தின்போது நகருக்கு அருகிலுள்ள பல நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், அணைப்பகுதி போன்ற ஏராளமான இயற்கை எழில் ஸ்தலங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்து ரசித்து மகிழலாம்
திரிசூருக்கு எப்போது விஜயம் செய்யலாம்?
பரபரப்பான வணிகக்கேந்திரமாக திகழும் திரிசூர் நகரமானது வருடமுழுதுமே வரவேற்கும் இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக காணப்படும் ஏப்ரல் – மே மாதங்களில் இங்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
இருப்பினும், இம்மாதங்களில் பூரம் திருவிழா எனும் எட்டு நாள் கோயில் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவதால் இந்த வைபவங்களை கண்டு ரசிக்க அதிக பக்தர்களும், பயணிகளும் திரள்கின்றனர். பொதுவாக, அக்டோபர்-பிப்ரவரி மாதங்களில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.
திரிசூர் நகரில் விமான நிலையம் இல்லை. பல நகரங்களுடன் சாலை மார்க்கமாக இது நல்ல போக்குவரத்து வசதிகளைக்கொண்டுள்ளது. மற்ற வழிகளை விட ரயில் மூலம் திரிசூருக்கு பயணம் மேற்கொள்வதே சொகுசான, எளிமையான பயண மார்க்கமாக உள்ளது.