’கடவுளின் சொந்த தேசம்’ என்றழைக்கப்படும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுள்ள கேரள மாநிலத்தின் ‘புராதன பாரம்பரிய’ நகரங்களில் ஓன்றுதான் இந்த ‘கோட்டயம்’. இது தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ளது.
கேரள அச்சு ஊடகத்துறை மற்றும் இலக்கிய செயல்பாடுகளின் பிரதான கேந்திரமாக விளங்குவதால் ‘அக்ஷர நகரி’ (எழுத்துக்களின் நகரம்) எனும் சிறப்புப்பெயரையும் ‘கோட்டயம்’ நகரம் பெற்றுள்ளது.
கோட்டா (கோட்டை)மற்றும் ‘அகம்’ (இருப்பிடம்) எனும் மலையாள சொற்களை சேர்த்து கோட்டயா என்று உருவான பெயரானது பின்னாளில் கோட்டயம் என்று திரிந்துவிட்டது. குண்ணுபுரம் என்று அழைக்கப்படும் பழைய கோட்டயம் நகரம் ஒரு மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது.
கோட்டயம் என்ற என்ற பெயர் வருவதற்கு காரணமான ‘தளியில் கோட்டை’ தெக்குங்கூர் ராஜாவால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை வளாகத்துக்குள்ளேயே ஒரு கிராமம் அமைக்கப்பட்டு ஆதி கோட்டயம் உருவாகியுள்ளது.
கிழக்கில் பிரம்மாண்டமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரையும் மேற்கில் மயங்கவைக்கும் வேம்பநாட் ஏரியையும் எல்லைகளாக கொண்டுள்ளதால் கோட்டயம் மாவட்டம் அற்புதமான இயற்கை அமைப்புடன் வீற்றுள்ளது.
திரும்பும் திசையெங்கும் திகட்ட வைக்காத இயற்கைக்காட்சிகளும் எழில் அம்சங்களும் இப்பிரதேசத்தில் நிரம்பி வழிகின்றன. செழிப்பான பயிர் நிலங்கள், மலைத்தோட்டங்கள், பீடபூமிகள், பசுமையான மலைகள் மற்றும் மலைத்திட்டுகள் என்று மயங்க வைக்கும் அழகுக் காட்சிகளை ரசித்தபடி வெறுமனே கோட்டயத்தை சுற்றி வந்தாலே போதும், பயணிகளுக்கு அலுக்காது.
ரப்பர் தோட்டங்கள், உள்ளூர் புராணிக கதைகள், அதிகபட்ச எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எனும் பெருமை மற்றும் சாந்தம் தவழும் ஏரிகள் ஆகிய அம்சங்களுக்கு சொந்தமான கோட்டயம் நகரமானது கல்வி, பாரம்பரியம், ரப்பர் மற்றும் ஏரிப்பகுதிகள் போன்றவற்றுக்கான கேரளிய அடையாளம் என்று சொன்னால் மிகையில்லை.
அது மட்டுமல்லாமல், வாசனைப்பயிர்கள் மற்றும் ரப்பர் போன்ற பணப்பயிர்களுக்கும் கோட்டயம் புகழ் பெற்று விளங்குகிறது. ரப்பர் வாரியத்துக்கான தலைமையகம் அமைந்துள்ள கோட்டயத்திலிருந்துதான் இந்தியாவின் இயற்கை ரப்பர் தேவைகள் முழுவதுமே பூர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், கேரள மாநிலத்தின் முக்கியமான ‘பதிப்பு ஊடக’ கேந்திரமாகவும் இது நிலைபெற்றுள்ளது.
மலையாள மனோரமா எனும் மிகப்பெரிய ஊடக நிறுவனத்தின் வெளியீடுகள் மற்றும் மங்களம், தீபிகா போன்ற பத்திரிகைகள் கோட்டயத்திலிருந்துதான் வெளிவருகின்றன.
இந்தியாவிலேயே 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எனும் புகழையும் இந்த கோட்டயம் பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் புகையிலையின் உபயோகத்தை முழுக்க தடை செய்துள்ள ஒரே மாவட்டம் கோட்டயம் என்பது வியக்கவைக்கும் மற்றொரு உண்மையாகும். சுற்றுச்சூழல் தூய்மையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் நகரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
இயற்கை ஏழில் மற்றும் கலாச்சாரப்பாரம்பரியம் போன்றவற்றுக்காக இது முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வருடந்தோறும் ஓய்வெடுக்கவும் உள்ளூர் கேரள கலாச்சார அம்சங்களை ரசிக்கவும் கோட்டயத்தை நாடி வருகின்றனர்.
இங்குள்ள பூஞ்சார் அரண்மனை கேரள மாநிலத்தின் வளமான பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பல ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களும் கோட்டயத்தில் பயணிகள் விஜயம் செய்வதற்காக காத்திருக்கின்றன.
திருநாக்கரா மஹாதேவா கோயில், பள்ளிப்புரத்து காவு, திருவெற்பு கோயில் மற்றும் சரஸ்வதி கோயில் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் இவற்றில் முக்கியமானவை. இங்குள்ள ‘கோட்டயம் சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்’ கேரள மாநிலத்திலுள்ள முக்கியமான முருகன் கோயில்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
புராதனமான ‘தழத்தங்காடி ஜும்மா மஸ்ஜித்’ மற்றும் கோட்டத்தவலத்தில் உள்ள பழமையான ‘செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச்’ போன்றவையும் ஏராளமான பக்தர்களை தினமும் ஈர்க்கின்றன.
கோட்டத்தவலம் குகை ஸ்தலமும் முக்கிய சுற்றுலா அம்சமாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டகம் மற்றும் பனச்சிகாடு போன்ற எழில் நிறைந்த கிராமப்பகுதிகளுக்கும் கோட்டயம் வரும்போது விஜயம் செய்ய மறக்கக்கூடாது.
மனதுக்கு சாந்தியை தரக்கூடிய சூழலை இந்த கிராமங்கள் கொண்டிருக்கின்றன. இலவீழாபூஞ்சிரா எனும் மலைவாசஸ்தலமும் இங்கு விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.
இவை மட்டுமல்லாமல் கோட்டயத்திற்கு அருகிலேயே முன்னார், எர்ணாகுளம், பீர்மேடு, தேக்கடி, மதுரை, வைக்கம், சபரிமலா, ஏட்டுமானூர் மற்றும் இன்னும் பல புகழ்பெற்ற சுற்றுலா நகரங்கள் அமைந்திருப்பதால் ஒரு நீண்ட விடுமுறைப்பயணத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ளலாம்.
கோட்டயத்தில் கழிக்கும் விடுமுறை அனுபவம் உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவுகளை அளித்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைக்கும் என்பது நிச்சயம். இந்த இயற்கை சொர்க்கபூமியில் நீர் சார்ந்த பொழுதுபோக்குகளான படகுச்சவாரி, நீச்சல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற உல்லாச அனுபவங்களையும் பயணிகள் பெறலாம். புகைப்பட பிரியர்களுக்கான ஏராளமான காட்சிகளும் இங்கு நிறைந்துள்ளன.
கேரளாவின் எல்லா நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளைக்கொண்டிருப்பதுடன் நீர்வழிப்போக்குவரத்தாலும் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மதுரை, கம்பம், குமுளி போன்ற நகரங்கள் மாநில நெடுஞ்சாலைகள் மூலம் கோட்டயம் நகருடன் இணைக்கப்பட்டுள்ளன வருடத்தின் எந்த நாளிலும் கோட்டயத்துக்கு விஜயம் செய்யலாம் என்றாலும் குளிர்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது.