இந்தியாவிலேயே மிகப்பிரசித்தமான, வேறு எங்குமே வழக்கத்தில் இல்லாத ‘விரத யாத்திரை’ எனும் ஐதீகப்பயணத்தின் முடிவில் தரிசிக்கப்படும் கோயிலான ‘ஐயப்பன் கோயில்’ வீற்றிருக்கும் திருத்தலமே இந்த ‘சபரிமலை’ ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
தரிசன மாதங்களான நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நிகழும் மண்டலபூஜை பருவத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த திருத்தலத்திற்கு திரளாக விஜயம் செய்கின்றனர். ஜாதி, மத, ஏழை, பணக்கார பேதங்கள் எதுவுமே இல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இந்த பருவத்தில் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
யாத்திரை ஐதீகம்
ராமாயண காவியத்தில் இடம்பெற்றுள்ள ‘சபரி’ எனும் கதாபாத்திரத்தின் பெயரையே இந்த தெய்வீக மலைப்பகுதி ஏற்றுள்ளது. பந்தனம் திட்டா மாவட்டத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்த மலைப்பிரதேசத்தின் காடுகள் பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கேரளாவின் இயற்கை எழிலுக்கான சான்றாகவே இந்த சபரிமலை பிரதேசம் புகழ் பெற்றுள்ளது. ஐயப்ப பஹவான் அல்லது ஸ்வாமி ஐயப்பன் எனும் விசேஷமான கடவுள் இங்கு குடிகொண்டுள்ளார்.
சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் 41 நாட்களுக்கு புலால் மறுத்து, ரோமம் மழித்தல் தவிர்த்து, புலனடக்கம் மேற்கொண்டு, காலை மாலை பூஜைகள் புரிந்து, கறுப்புடை தரித்து மற்றும் நல்லொழுக்கம் பேணி, கடும் விரதத்திற்குப்பின்னர் இந்த கோயிலுக்கு நடந்தே யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.
தற்சமயம் மலைப்பகுதிவரை போக்குவரத்து வசதிகள் மூலம் பக்தர்கள் வருகை தந்தாலும் அடிவாரத்திலிருந்து அடர்ந்த காடுகள் வழியே நடைப்பயணமாக கோயிலை சென்றடைவது இந்த ஆன்மீகப்பயணத்தின் தனித்தன்மையான அம்சமாக விளங்குகிறது.
பசுமையான காடுகள் வழியே, ஓடைகளும் காட்டுச் சமவெளிகளும் குறுக்கிடும் பலவகைப்பட்ட மலைப்பகுதிகளை கடந்து இந்த கோயிலை சென்றடையும் அனுபவம் வாழ்வில் அனைவருமே அனுபவிக்க வேண்டிய ஒரு பயணமாகும்.
தெய்வதரிசனத்துக்கும் சுயதரிசனத்துக்கு இட்டுச்செல்லும் அற்புதப்பயணம்
மலையேற்றம் மூலம் கோயிலுக்கு செல்வதற்கான யாத்ரீகப் பாதையானது மிக நீண்டதாகவும் களைப்பூட்டுவதாகவும் இருக்கும். இருப்பினும் வழிநெடுக இளைப்பாறிக்கொள்வதற்கு ஏற்ற வகையில் மரங்களும் குளுமையான நிழற்பகுதிகளும் நிரம்பியிருக்கின்றன.
சராசரியாக 450 அல்லது 500 லட்சம் யாத்ரீகபக்தர்கள் இம்மலைப்பகுதிக்கு வருடா வருடம் விஜயம் செய்கின்றனர். உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்களை ஈர்க்கும் ஒரே பிரம்மாண்ட பக்தி திருத்தலமாக இந்த சபரிமலை புகழ் பெற்றுள்ளது.
18 மலைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த இந்த ஐயப்பன் கோயிலானது ஆன்மிக அம்சங்களுக்கு அப்பாற்பட்டும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயமாகும்.
அடர்ந்த காடுகள் மற்றும் மலைச்சிகரங்களால் சூழப்பட்டு ஒரு மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.
தலபுராண ஐதீகப்பின்னணி
புராணங்களின்படி ஐயப்ப பஹவான் (மணிகண்டன்) எனும் ஹிந்துக்கடவுளானவர் மஹிஷி எனும் அசுரப்பிறவியை கொன்றழித்துவிட்டு இந்த சபரிமலையில் தவம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஒற்றுமை, சமத்துவம் மற்றும் மானுட நன்மையின் ஒட்டுமொத்த கருத்துருவமாக இந்த ஐயப்பன் கோயில் பக்தர்களால் போற்றப்படுகிறது. அதாவது நன்மையே எப்போதும் வெல்லும் என்பதையும் நல்லவர்களுக்கு இறுதியில் நீதி நிச்சயம் கிடைக்கும் என்பதையும் இந்த ஐயப்பன் கோயில் எடுத்துரைப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
ஜாதி, மத பேதமின்றி பக்தர்களை வரவேற்கும் ஒருசில கோயில்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தனது ஆயுதமான கோடரியை வீசி எறிந்துவிட்டு இந்த சபரிமலை ஐயப்பன் கோயிலை பிரதிஷ்டை செய்தாகவும் புராணிக ஐதீகங்கள் கூறுகின்றன. கேரள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு இந்த ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வருகிறது.
ஐயப்பன் கோயில் யாத்திரை
சபரிமலைக்கான யாத்திரை பயணக்காலம் நவம்பர் மாத மத்தியில் துவங்கி ஜனவரி மாதத்தின் நான்காம் வாரத்தில் முடிவடைகிறது. சபரிமலை நகரத்தில் யாத்ரீகர்கள், கடைகள் மற்றும் விடுதிகள் என்று நிரம்பி வழிந்தாலும் உள்ளூர் மக்கள் என்ற தனிப்பட்ட பிரிவினர் யாரும் இங்கு இல்லை.
மண்டலபூஜா மற்றும் மகரவிளக்கு ஆகிய இரண்டு முக்கியமான சடங்குத் திருநாட்கள் சபரிமலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் ‘வாவர் ஸ்வாமி’ என்ற முஸ்லிம் குருவின் கோயிலும் இந்த சபரிமலையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியாத பயணம்
சபரிமலை யாத்திரையானது ஆன்மிக தரிசனத்தையும் இயற்கை தரிசனத்தையும் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதால் ஒரு ஒப்பற்ற யாத்திரை அனுபவமாக கருதப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் ஒரு முறை இந்த திருத்தலத்துக்கு விஜயம் செய்வதை அவசியமான சுய நம்பிக்கை சடங்காக கொண்டுள்ளனர். கரடுமுரடான மலைப்பாதையின் வழியே இயற்கையோடு ஒன்றி யாத்திரை மேற்கொள்ளும்போது ‘அகமன கசடுகள்’ யாவும் கழன்று சுயகர்வம் ஒழிந்து குழந்தைகள் போல் நாம் மாறுவதை பயணத்தின் முடிவில் உணரலாம். இந்த அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க முடிந்த ஒன்றல்ல. அனுபவித்து உணர வேண்டிய ஒன்றாகும்.
கோயில் அமைந்திருக்கும் உச்சியை அடைய 3 கி.மீ தூரத்துக்கு மலையேற்றம் செய்யவேண்டியுள்ளது. ஆனால் சிரமமான இந்த மலையேற்றம் ரசிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.
பலவகையான தாவரங்களும் உயிரினங்களும் வழியெங்கும் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசனை கொண்டவர்களை பரவசப்படுத்தும் பயணமாக இந்த மலையேற்றம் அமையும்.
பம்பா ஆற்றங்கரை நகரம் வரை சாலைப்போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து மூலமாக வந்து அங்கிருந்து மலைப்பயணத்தை பக்தர்களும் பயணிகளும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.
இங்கு ஒருங்கிணைந்த சுற்றுலாத்திட்ட சேவைகள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவை பயணிகளுக்காக வருடமுழுதுமே வழங்கப்படுகின்றன.