கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலம்புழா நகரம், இயற்கையின் பேரழகும், மனிதனின் ஆற்றலும் கைகோர்க்கும் புகழ்பெற்ற பொழுதுபோக்கு ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக மலம்புழா நகரத்தை தேடி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
கேரளாவின் நீர் பாசன வசதிக்காக மலம்புழா நகரில் நீர் மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கு காணப்படும் பரந்த கால்வாய் அமைப்புகள் காரணமாக மலம்புழா அணை கேரளாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன அணையாக கருதப்படுகிறது.
மேலும் பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலம்புழா நகரில் சுற்றுலாப் பயணிகளுக்காக எண்ணற்ற பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
மலம்புழா நகரில் எத்தனையோ சுற்றுலா மையங்கள் இருக்கின்ற போதும் மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கம்தான் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. இந்த அணைப் பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஃபேண்டஸி பார்க் என்ற அற்புதமான கேளிக்கை பூங்கா அமைந்திருக்கிறது.
மலம்புழாவில் உள்ள திரெட் கார்டன், ஸ்நேக் பார்க், யக்ஷி சிலை, ராக் கார்டன், உடன் கட்டோலா, தென்குருசி போன்ற இடங்களிலும் பயணிகள் கூட்டத்தை பார்க்கலாம். இவைதவிர பரம்பிக்குளம் சரணாலயம், சைலன்ட் வேல்லி தேசிய பூங்கா, நெல்லியம்பதி, மான் பூங்கா, போத்துண்டி நீர்த்தேக்கம், தோணி பாதுகாக்கப்பட்ட காடுகள் போன்ற இடங்களுக்கும் நீங்கள் மலம்புழா சுற்றுலா வரும் போது கண்டிப்பாக சென்று வர வேண்டும்.
மலம்புழாவின் கோடை காலங்களில் கடுமையான வெப்பம் நிலவுமாதலால், பயணிகள் இந்த காலங்களில் மலம்புழா சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது. ஆனால் இதமான வெப்பநிலையை கொண்டிருக்கும் பனிக் காலங்களில் மலம்புழா நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
மேலும் பாலக்காடு மாவட்டம் திருவிழாக்களுக்கு பெயர் போன காரணத்தால், கல்பாத்தி ரத்தோல்சவம் (தேர்த்திருவிழா) , காளப்பூட்டு (காளை பந்தயம்) போன்ற திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் நீங்கள் மலம்புழா நகருக்கு சுற்றுலா வருவது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.