கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மணிமாலா ஆற்றங்கரையில் வீற்றுள்ள ஒரு அமைதியான சிறு நகரம் இந்த திருவல்லா ஆகும். ‘கோயில்களின் நகரம்’ என்ற ஆன்மீக கீர்த்தியை இது பெற்றுள்ளது. இந்த நகரத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப்பின்னணி போன்றவை இங்குள்ள கோயில்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன.
இந்தியா முழுவதுமே புகழுடன் அறியப்படும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லப கோயில் இந்த ஊரில் அமைந்துள்ளது. கி.பி 52ம் ஆண்டிலேயே இந்த பகுதிக்கு அறிமுகமாகிவிட்ட கிறித்துவத்தின் அடையாளமாக பளியக்கரா சர்ச் எனும் தேவாலயமும் இங்கு அமைந்துள்ளது.
இன்னும் பல புராணிகக்கதைகள் மற்றும் ஐதீகங்கள் போன்றவற்றை தனது அடையாளங்களின் பின்னணியாக இந்த திருவல்லா நகரம் பெற்றுள்ளது. இங்குள்ள எல்லா திருத்தலங்கள் மற்றும் வைபவங்கள் ஆகியவற்றுக்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான கதையை கொண்டிருப்பது திருவல்லாவின் விசேஷமாகும்.
ஸ்தலபுராண கதைகளின்படி திருவிதாங்கூர் மஹாராஜாவால் இந்நகரம் ஸ்ரீ வல்லபபுரம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் பின்னர் இது திருவல்லபபுரம் என்று மாறி இறுதியில் திருவல்லா என்று திரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
திருவல்லபன் என்ற விஷ்ணுக்கடவுளின் பெயரால் இந்நகரம் திருவல்லா என்று அழைக்கப்படுவதாகவும் மற்றொரு நம்பிக்கை நிலவுகிறது. எப்படியாயினும் இன்று திருவல்லா நகரம் மஹாவிஷ்ணுவுக்கான திருத்தலமாகவே பிரசித்தி பெற்று விளங்குகிறது.
பாரம்பரிய சூழலில் ஒரு சுற்றுலா அனுபவம்
திருவல்லாவின் பாரம்பரியப்பின்னணியானது கோயில்கள் மற்றும் அவற்றின் சடங்குகளோடு தொடர்புடையதாக மட்டுமல்லாமல் பல்வேறு மதத்தத்துவங்களை உள்ளடக்கிய ஆன்மீக அடையாளமாகவும் திகழ்கிறது.
இங்கு ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் ஆகிய மதங்களின் நற்கருத்துகள் உள்ளூர் பாரம்பரியத்துடன் கலந்து காட்சியளிக்கின்றன. பல முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் இந்துக் கோயில்களுக்கு அருகிலேயே வீற்றிருப்பதோடு புகழ் பெற்ற மசூதிகளும் இந்நகரில் இடம் பெற்றிருக்கின்றன.
எனவெ மதநல்லிணக்கம் நிலவும் ஒரு கலவையான சாத்வீக குணாம்சம் இந்த திருத்தலத்தில் மிளிர்கிறது. இந்த நகரின் பொருளாதார வளர்ச்சிக்கும் வணிக செயல்பாடுகளுக்கும் இங்கு அமைந்திருக்கும் கோயில்கள் ஒரு கருவியாகவும் அமைந்துள்ளன.
இந்நகருக்கு மட்டுமே உரிய தனித்தன்மையான திருவிழாக்கலை நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் போன்றவற்றையும் திருவல்லா பெற்றுள்ளது. ஆராட்டு, சந்தனக்குடம், சுட்டுவிளக்கு, எழுநல்லாத்து போன்றவை இந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
பருவநிலையும் உள்ளூர் ருசிகளும்
திருவல்லா நகரமானது அதன் இனிமையான இதமான பருவநிலைக்கு புகழ்பெற்றுள்ளது. ஆகஸ்ட் மற்றும் அதற்கடுத்த மாதத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் இப்பகுதியில் கடுமையான மழைப்பொழிவை தருகிறது.
வறண்ட வெப்ப மண்டலச்சூழலை பெற்றிருந்தாலும் திருவல்லாவின் பருவநிலை மிதமாகவே காணப்படுகிறது. பசுமைக்குளிர்ச்சியுடன் காட்சியளிக்கும் மழைக்காலத்துக்கு பிந்தைய பருவம் இந்த வரலாற்று நகரத்தை நன்கு சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.
தென்னிந்திய உணவுப்பிரியர்களுக்கு இந்த நகரத்தின் உணவுத்தயாரிப்புகள் ரொம்பவே பிடிக்கும். இப்பகுதியில் நெல் அதிகம் விளைவதால் அரிசியே இங்கு முக்கிய உணவுப்பொருளாக உள்ளது.
தென்னிந்திய உணவு என்றாலே இட்லி தோசை மட்டும்தானா என்று நினைப்பவர்களுக்காக இங்கு விதவிதமான பண்டங்கள் ருசித்து மகிழ கிடைக்கின்றன. புட்டு கடலை மற்றும் அப்பம் போன்றவை இங்கு முக்கிய காலை உணவுப்பண்டங்களாகும்.
எல்லா கேரளிய உணவுத்தயாரிப்புகளிலும் தேங்காய் சேர்க்கப்படுவதால் பொதுவாக சாப்பாடு மிகக்கனமானதாகவே இருக்கும். எந்த காயாக இருந்தாலும் அதை வைத்து ஊறுகாய் செய்து விடுவது உள்ளூர் பழக்கமாக உள்ளது.
மாங்காய், எலுமிச்சை மற்றும் நெல்லி போன்ற காய்களில் தயாரிக்கப்பட்ட விதவிதமான ஊறுகாய்களை இங்கு சுவைக்கலாம். இனிப்பான, புளிப்பான, கசப்பான, துவர்ப்பான, மசாலா நிரம்பிய பலவித உணவுத்தயாரிப்புகள் இங்கு பரிமாறப்படுகின்றன.
இந்த சிறிய நகரம் தனது பழமையான தோற்றம் மற்றும் ரசிக்கக்கூடிய இயற்கை காட்சிகள் மூலம் உங்களை மிகவும் கவர்ந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும், புராணக்கதைகள் ஐதீகங்கள் போன்றவற்றில் விருப்பம் உள்ளவராக இருப்பின் திருவல்லா உங்களுக்கே உங்களுக்கான நகரம் ஆகும். மஹாராஜாக்களின் கதைகளும் கோயில்கள் கட்டப்பட்ட ஐதீக புராணங்களும் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன.